புத்தாண்டில் புதிய முடிவு.... அமைச்சர்களை கலாய்த்த தினகரன்
அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்க போவதில்லை என புத்தாண்டில் முடிவெடுத்துள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: புத்தாண்டில் எடுத்திருக்கிற முடிவு என்னவென்றால் அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லக்கூடாது என்பது தான் என தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க.வில் உள்ள நல்லவர்கள் எங்களை நோக்கி வர இருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு இருக்கிறார்கள். அதனால்தான் ஊட்டி பொதுக்கூட்டத்தில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள் பலர் பேசும்போது, ஒரு அளவை தாண்டி தாக்கி பேசி இருக்கிறார்கள் அதற்கு பயம்தான் காரணம், என்றார்.
மேலும் தாங்கள் அசந்த நேரம் பார்த்து தேர்தலில் நான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளவர்களை பார்த்து நான் கேட்பது ஒன்று தான். தேர்தல் நேரத்தில் நீங்கள் என்ன தியானம் செய்ய போயிருந்தீர்களா..?. ஓபிஎஸ் எனக்காக ஆரம்ப காலக்கட்டத்தில் பிரச்சாரம் செய்ததாக கூறுகிறார், அதெல்லாம் பொய் எனக்காக அவர் அதிமுகவில் ஓட்டு போட்டு இருக்கலாம் அது மட்டும் தான் அவர் செய்தார். இதற்கு மேல் நான் எதைப்பற்றி பேசப்போவதில்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.
மேலும் புத்தாண்டில் நான் எடுத்திருக்கிற முடிவு என்னவென்றால் இவர்களுக்கு நான் பதில் சொல்ல போவதில்லை. தயவு செய்து அவர்கள் என்ன சொன்னாலும் அவர்களை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். எடப்பாடி அணியினர் தான் பகல் கனவு காண்கின்றனர். எங்களின் கனவு அப்துல்காலம் சொன்னது போல நல்ல தமிழகத்தை உருவாக்கும் ஒரு கனவு என்று தினகரன் தெரிவித்தார்.