நள்ளிரவில் வேட்டி, சேலை விநியோகம் செய்த அதிமுகவினர்- கைகலப்பில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள்
திண்டுக்கல்: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி திண்டுக்கல் அருகே மக்களுக்கு இரவில் வேட்டி-சேலை விநியோகம் செய்த அதிமுகவினரை மற்ற கட்சியினர் தட்டிக் கேட்டதால் பெரும் மோதல் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சீவல்சரகு ஊராட்சி ஆதிலட்சுமி புரத்தில் நேற்று இரவு அ.தி.மு.கவினர் வேஷ்டி-சேலை, ஜெயலலிதா படம் பொறித்த பனியன், துண்டு, ஆகியவற்றை வீட வீடாக வினியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சித்தையன் கோட்டையில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் காரில் வந்து கொண்டிருந்தார். இரவு நேரத்தில் சந்தேகப்படும்படியான கார் நிற்பதைப்பார்த்து அங்கு வந்தார்.
சீவல் சரகு அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் ராஜேந்திரனுக்கு சொந்தமான காரில் வைத்து வேட்டி- சேலை வழங்கப்பட்டது தெரியவந்தது. உடனே அவர்களை தடுத்து நிறுத்திய தி.மு.கவினர் இது குறித்து செம்பட்டி போலீசாருக்கும் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வர தாமதம் ஆனது. இதனால் ஆத்தூர் பிரிவில் செந்தில்குமார் தலைமையில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், வேட்டி-சேலை வழங்கிய அதிமுகவினருடன் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உண்டாது. அதன் பிறகு அங்கு வந்த போலீசார் மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 2 பண்டல்களில் வைத்திருந்த வேட்டி-சேலைகளையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சீவல்சரகு அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராஜா மற்றும் தி.மு.க. சார்பில் தனித்தனி புகார்கள் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் தி.மு.க அளித்த புகாரின் பேரில் அ.தி.மு.க ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நள்ளிரவு வரை நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.