குடும்பத்துடன் சீட்டாடிய பெண் காவலர் – சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட திருப்பூர் எஸ்.பி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் குடும்பத்தோடு உட்கார்ந்து சீட்டாடிய பெண் காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரத்தை அடுத்த நல்லூரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மகள் சுதாராணி. இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அலங்கியம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இவர் தாராபுரத்தில் கணவர் பெரியசாமி மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் பிளஸ் 2 தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் சுதாராணி விடுமுறையில் குடும்பத்தினருடன் திருப்பூர் அருகிலுள்ள நல்லூரில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு சுதாராணியின் தந்தை முத்துச்சாமி தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதாக முடிவுசெய்தனர். அவர்களுடன் சுதாராணியும் கொடுமுடி சென்று காவடித் தீர்த்தம் எடுத்துக்கொண்டு வந்து இரவு நல்லூரில் உள்ள தங்களது தோட்டத்தில் தங்கியுள்ளனர்.
இரவு முழுவதும் சுதாராணியின் குடும்பத்தினர் அங்கே சீட்டு விளையாடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சுதாராணியின் தோட்டத்திற்கு சென்று சீட்டு விளையாடிக்கொண்டிருந்த பெரியசாமி உள்பட மற்றவர்களிடம் விசாரணை செய்ததுடன் இப்படி பொதுமக்கள் பார்வையில் படும் இடங்களில் சீட்டாடக்கூடாது என கூறியுள்ளனர்.
நானும் அலங்கியம் போலீஸ் நிலையத்தில் போலீசாக உள்ளேன். என் வீட்டுக்கே வந்து என் கணவரையும் குடும்பத்தினரையும் மிரட்ட நீ யார். நான் நினைத்தால் நடப்பதே வேறு என்று உதவி ஆய்வாளரை மிரட்டியுள்ளார் சுதாராணி.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய உதவி ஆய்வாளர் தன்னை பணி செய்ய விடாமல் பெண் போலீஸ் சுதாராணி இடையூறு செய்ததாக திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை கொடுக்குமாறு உத்தரவிட்டார். அவரது விசாரணை முடிவில் பெண் காவலர் சுதாராணி மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.
இதைதொடர்ந்து பெண் காவலர் சுதாராணியை சஸ்பெண்ட் செய்தும் சுதாராணியின் தந்தை முத்துச்சாமி, கணவர் பெரியசாமி, உறவினர் அஜித் உள்பட 5 பேர் மீது சூதாட்டம் மற்றும் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள நல்லூர் காவல்நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.