திண்டுக்கல்.. 251 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட உதவி பி.ஆர்.ஓ அருண் சஸ்பெண்ட்
திண்டுக்கல் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ அருண் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்: 251 கிலோ கஞ்சா போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.பி.ஆர்.ஓ அதாவது மாவட்ட உதவி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி அருண் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஏபிஆர்ஓவாக அதாவது மாவட்ட உதவி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் 33 வயதுடைய அருண்குமார்.
நேற்று முன்தினம் முன்பு அருண்குமார் தனது வீட்டிலிருந்தபோது, சென்னையிலிருந்து வந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரது வீட்டுக்குள் அதிரடியாக சென்றனர். பின்னர் அவரது காரையும் சோதனை செய்தனர். அப்போது அவரது காரில் தடை செய்யப்பட்ட 251 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றினை பறிமுதல் செய்த போலீசார் அருண்குமார் உள்ளிட்ட மேலும் 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அருணை, பணியிடை நீக்கம் செய்து, திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக ஒரு செய்திக்குறிப்பினையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 12ஆம் தேதி தனது காரில், 251 கிலோ கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்ததாக, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அருண், செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் உத்தரவின்பேரில், கைது செய்யப்பட்ட நாள் முதலே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அலுவலக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.