அதிமுகவிலிருந்து கொத்து கொத்தாக நீக்கப்படும் தினகரன் ஆதரவாளர்கள்.. திண்டுக்கலில் 100 பேர் நீக்கம்
திண்டுக்கல் மாவட்ட அதிமுகவிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் 100 பேர் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்ட அதிமுகவிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் 100 பேர் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசும், ஓபிஎஸ் தலைமையில் அதிமுக கட்சியும் இயங்கி வருகிறது. இந்நிலையில் தன்னுடைய ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருப்பதாக தினகரன் பகிரங்கமாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிமுகவில் களையெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தினகரன் ஆதரவாளர்கள் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஒருவாரமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாவட்ட துணை செயலாளர், முக்கிய நிர்வாகிகள் உள்பட 100 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் கொள்கைக்கும், கோட்பாட்டுக்கும் முரணான வகையில் இவர்கள் செயல்பட்டதால் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கட்சிக்கு களங்கம் விளைவித்து அவப்பெயர் ஏற்படுத்தியதால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு வருவதால், விரைவில் தினகரன் கட்சி தொடங்க அதிமுக தலைமையே ஆட்களை சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.