திண்டுக்கல் இந்து முன்னணி பிரமுகர் கொலையில் இந்து மக்கள் கட்சிக்கு தொடர்பு- 3 பேர் மீது வழக்கு!
திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய இந்து முன்னணி பிரமுகர் கொலையில் இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் தர்மா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் இந்து முன்னணி அமைப்பாளர் கொலை தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் தர்மா உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த 3 குற்றவாளிகளும் திருப்பூரில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த மணிமாறன் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதனால் திண்டுக்கல் நகரில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இக்கொலையில் இந்து மக்கள் கட்சியினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இக்கொலை தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் தர்மா மற்றும் ராகவன், மகேந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் கொலையாளிகள் 3 பேரும் திருப்பூருக்கு தப்பி ஓடி பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் தனிப்படை போலீசார் திருப்பூருக்கு விரைந்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சியில்தான் கொல்லப்பட்ட மணிமாறனும் இருந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்து முன்னணியில் அவர் இணைந்தார். பாரதிபுரத்தில் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைப்பதில் தர்மாவுக்கும் மணிமாறனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தே மணிமாறன் கொலை செய்யப்பட்டுள்ளதாக திண்டுக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலைக்கு வேறு ஒரு மதத்தினர் காரணம் என கூறி வெறியாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்து முன்னணியின் சக நிர்வாகிகளே அக்கொலைக்கு காரணம் என்பது பின்னர் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.