சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக புரளி.. திண்டுக்கல் ஐ. லியோனி போலீசில் புகார் !
சென்னை: புதுக்கோட்டை அருகே விபத்தில் தான் உயிரிழந்துவிட்டதாகப் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி குறித்து வதந்தி ஒன்று இணையங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தவிட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.
இது லியோனி ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லையாம், நன்றாக தான் இருக்கிறாராம். வேண்டுமென்றே இப்படி தகவல்களை ஒரு சிலர் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என லியோனி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மாநகரா காவல் துறை ஆணையரிடம் நேரில் புகார் மனுவை அளித்த பின் லியோனி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முகநூல், வாட்ஸ் அப் மூலம் என்னை பற்றி தவறான தகவல்களை சிலர் திட்டமிட்டு பரப்பி வருவதாக அவர் தெரிவித்தார்.
அதிமுக பற்றி மேடைகளில் விமர்சிப்பதால் இது போன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகிறதோ எனவும் அவர் சந்தேகம் தெரிவித்தார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறினார். எனவே, தன்னைப்பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரி என்ற நபர் முகநூலில், லியோனி மரணம் அடைந்துவிட்டதாக பதிவிட்டிருந்தார். அதோபோல் பாமகவினரும் இதுபோன்ற வதந்தி பரப்பியது குறிப்பிடத்தக்கது