இடைவிடாது ஒலிக்கும் ராஜாவின் பாடல்கள் 1980, 90களைத் தாண்டாத திண்டுக்கல் தேசம்
Recommended Video
சென்னை: 1980களின் இறுதியில் விடலைப் பருவம் விதைவிட்ட பொழுதுகள்... எங்கள் பள்ளிக் கால திண்டுக்கல் பேருந்து பயணம் அலாதியானது.. சொல்லி மாளாதது...
பேருந்துகளே காதல் நிலையங்களாக மாறிப் போயிருந்தன... பேருந்துகளில் ஒலிக்கும் பாடல்கள் எங்களுக்காகவே பாடுவதைப் போல இருக்கும்.
பெரும்பாலும் இளையராஜாவின் இசை கீதங்கள்தான்... எங்கள் கண்கள் பேசிக் கொண்டிருந்தாலும் எங்களுக்காகவே அந்த இசைமேதையோ அல்லது அவரது இசையோ தாலாட்டு பாடிக் கொண்டிருப்பார்..
1990களின் தொடக்கத்தில் எங்கள் கிராமங்களை விட்டு தொலைதூர நகரங்களுக்கு வாக்கப்பட்டுப் போக நேர்ந்தது. பெருநகரங்களின் அரசுப் பேருந்துகளில் எப்படா இறங்குவோம் என்கிற அளவுக்கு போக்குவரத்து நெரிசல் கழுத்தை நெறிக்கும்.
ஒரு காலகட்டத்தில் பெருநகர வாழ்க்கை வெறுத்துப் போய் தாய் மண்ணுக்கே திரும்பிவிட்டேன்.. என்னால் இந்த நிமிடம் வரை நம்பவே முடியவில்லை.
என்னை மீண்டும் 1980களின் இறுதிக்குக் கொண்டு போய் தாலாட்டுகின்றன எங்கள் குக்கிராமத்து தனியார் பேருந்துகள்.. ஒவ்வொரு பேருந்து பயணமும் அவ்வளவு ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஆமாம்.. 1980ளின் இறுதியில் 1990களின் தொடக்கங்களில் ஒலித்த அதே பாடல்கள்... அதே ராஜாவின் பாடல்கள்.. இப்போதும் எங்கள் பேருந்துகளில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
பேருந்துகள்தான் என்றில்லை.. ஷேர் ஆட்டோக்கள் கூட இங்கே அதைத்தான் ஒலிபரப்புகின்றன. எங்கள் தேசம் இன்னமும் ராஜாவைவிட்டு இம்மியளவும் நகரவில்லை. ராஜாதான் எங்கள் தேசத்துக்குமான எல்லாமும்..
கேசட்டுகளில் இருந்து சிடிக்களுக்கும் அதில் இருந்து பென் டிரைவ்களுக்குமாக இடம்பெயர்ந்து எங்களை ஆசுவாசப்படுத்துகிறார் இளையராஜா.