திண்டுக்கல் லியோனி மீதான வழக்கு – 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
திருவாரூர்: பிரபல பட்டிமன்ற பேச்சாளாரான திண்டுக்கல் லியோனி மீதான அவதூறு வழக்கு விசாரணை பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் கடைத் தெருவில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.எஸ். விஜயனுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் செய்தார்.
அவர் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ததாகவும், இது தேர்தல் விதிமுறை மீறல் என்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் நாகராஜன் ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மற்றும் அப்போதைய தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்து அன்பரசு ஆகியோர் மீது புகார் செய்தார்.
இந்த வழக்கு திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திண்டுக்கல் லியோனி, அன்பரசு ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் விசாரணையை வருகிற 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சிவா உத்தரவிட்டார்.