அம்மா இட்லி முதல் நரசிம்மராவ் சிரிப்பு வரை... திண்டுக்கல்லாரின் அசத்தல் பேச்சுகள்
அம்மா இட்லி சாப்பிட்டார் முதல் நரசிம்மராவ் வரை திண்டுக்கல்லார் உளறிய பேச்சுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
சென்னை: அம்மா இட்லி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய் முதல் நரசிம்மராவ் உயிருடன் இருக்கிறார் வரை திண்டுக்கல் சீனிவாசனின் உளறல் பேச்சுகளின் ஒரு தொகுப்பு.
திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு இவர்களெல்லாம் எதையாவது உளறி சமூகவலைதளங்களில் அசிங்கப்பட்டு எப்போதும் லைம் லைட்டில் இருக்கவே விரும்புபவர்கள். அந்த வகையில் திண்டுக்கல் சீனிவாசன் இன்றைய தினம் பேசுகையில் நரசிம்மராவ் உயிருடன் இருப்பதை போன்று பேசியுள்ளார்.
இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர் இதுவரை பேசிய சர்ச்சை பேச்சுகளின் தொகுப்பை காணலாம்.
சட்னி சாப்பிடலை
திண்டுக்கல்லில் நடந்த 'அண்ணா பிறந்தநாள் விழா' பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், 'ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை. சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்கவிடவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், 'அவர் இட்லி சாப்பிட்டார் சட்னி சாப்பிட்டார்' என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய். சசிகலா குடும்பம் சொல்லச் சொன்னதைத்தான் வெளியில் சொன்னோம் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.
பிரதமர் மோடி
திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய மருத்துவக் குழு தமிழகத்தில் டெங்கு குறித்து ஆய்வு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்ததை கூற முற்பட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என்று உளறினார்.
சுதா ரங்கநாதன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாடகி சுதா ரகுநாதனை சுதா ரங்கநாதன் என்றும் பரத நாட்டிய கலைஞர் என்று உளறி வாங்கிக்கட்டிக் கொண்டார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மற்ற மாநில முதல்வர்களை அழைப்பீர்களா என கேட்டதற்கு மற்ற மாநில முதல்வர்களில் யாருக்கு எம்ஜிஆரை தெரியும் என்று கேட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
சசிகலா கொள்ளைக்கு பதில் ஜெ. பெயர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் 18 எம்எல்ஏக்களும் பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று கூறினார். அதாவது சசிகலாவால் கொள்ளையடிக்கப்பட்ட... என்பதற்கு பதிலாக ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட என்று கூறிவிட்டார்.
எதற்காக என தெரியவில்லை
இவ்வாறு பல்வேறு தருணங்களில் இவர் உளறி கொட்டி வருகிறார். இதை தெரிந்துதான் இப்படி செய்கிறாரா அல்லது வாய்த்தவறி செய்கிறாரா இல்லை எப்போதும் லைம்லைட்டில் இருக்கவே இப்படி செய்கிறாரா எந்று தெரியவில்லை.