திருவிழாவில் பிள்ளையை ஏமாற்றியது போல ஆர்கே நகர் தேர்தல்... திண்டுக்கல் சீனிவாசன் புதுக்கதை!
திருவிழாவில் பிள்ளைகளை ஏமாற்றியது போல ஆர்கே நகர் தேர்தல் நடந்திருப்பதாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
Recommended Video
திண்டுக்கல் : ஆர்கே நகர் தேர்தலில் மக்களை ஏமாற்றி தினகரன் வெற்றி பெற்றுள்ளார், தொகுதிக்கு செல்லும் தினகரன் ஆட்களிடம் ரூ. 20 பணத்தை கொடுத்து ரூ. 10 ஆயிரம் மக்கள் வெளிப்படையாகவே கேட்கின்றனர். வாக்காளர்கள் அனைவரும் தினகரனுக்கு எதிராக போராடத் தயாராகி வருவதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
திண்டுக்கல் மணிக்கூட்டு அருகே அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு அந்தக் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது : ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆகிறது. ஒன்றரை வருடமாக நல்லமுறையில் மக்கள் பாராட்டும் வகையில் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என ஸ்டாலின் பினாமியான டிடிவி கூறி வருகிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நேற்றுக்கூட அந்தப் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல போனபோது 20 ரூபாய் நோட்டு கொடுத்து 10ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி இன்னும் பணம் தரவில்லை என மக்கள் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்கள்.
திருவிழாவில் பிள்ளையை ஏமாற்றியது போல் நடந்திருக்கிற ஆர்கே நகர் தேர்தல். இதனால் அந்தப் பகுதியில் உள்ள வாக்காள மக்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூட தயாராக உள்ளனர். தற்போது முத்தலாக் கட்சி பயணம், மானிய பயணம் ரத்து போன்ற பிரச்சனைகளை மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.