வேறு மாப்பிள்ளையா? காதலி கண்முன்னேயே தன்னைதானே கத்தியால் குத்தி கொண்ட திண்டுக்கல் இளைஞர்
காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்,
Recommended Video
திண்டுக்கல்: காதலி தனக்கு கிடைக்காத காரணத்தினால் இளைஞர் ஒருவர் தன்னை தானே கத்தியால் குத்திகொண்டு அனைவருக்கும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். டிப்ளமோ படித்துள்ளார். கரூரில் உள்ள ஒரு டயர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு ஃபேஸ்புக் காதலாம். அந்த பெண் நிலக்கோட்டையை சேர்ந்தவர். எம்.காம். படித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஃபேஸ்புக் தொடர்ந்துள்ளது. அடிக்கடி இருவரும் நேரிலும் பார்த்து பேசி வந்துள்ளனர். தாம் விரும்பிய அந்த பெண்ணை திருமணமும் செய்ய சுரேஷ்குமார் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக தனது காதலை வீட்டில் பெற்றோரிடம் சொல்லியுள்ளார். அவர்களும் மகனின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க மனமில்லாமல், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்,
ஆனால் பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாதி பிரச்சனை அந்த பெண்ணின் வீட்டிலும் வெடித்துள்ளது. சுரேஷ்குமார் வேறு சமூகத்தவர் என்பதால் காதலை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையை அவரது வீட்டில் பார்த்துள்ளதாக சுரேஷ் கேள்விப்பட்டுள்ளார். இதனால், காதலியை பார்ப்பதற்காக இன்று காலை நிலக்கோட்டை சென்றார். ஆனால் தன் பெண்ணை பார்க்க அனுமதிக்க மாட்டோம் என பெற்றோர் சுரேஷ்குமாரை தடுத்தனர். இதனால் வீட்டு வாசலில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த சுரேஷ்குமார், தன்னிடமிருந்த கத்தியால் தன்னை தானே 3 முறை குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இந்த கத்திக் குத்தினால் சுரேஷ்குமாரின் உடலிலிருந்து ரத்தம் கொட்ட தொடங்கியது. இதனை கண்ட பெண்ணின் பெற்றோர், படுகாயமடைந்து நிலைகுலைந்த சுரேஷ்குமாரை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலி கண்முன்னே கத்தியால் இளைஞர் குத்தி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.