அன்பு அண்ணே.. கண்ணாமூச்சி விளையாண்டது போதும்.. வெளியே வாங்க!!!... அமீர் வேண்டுகோள்
அசோக்குமாருக்கு பரிகாரம் செய்ய நினைத்தால் ஓடி ஒளிந்து விளையாடியது போதும், வெளியே வாருங்கள் என்று அன்புச்செழியனுக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: அன்பு அண்ணே ஓடி ஒளிந்தது போதும், தயவு செய்து வெளியே வந்து சரியான முடிவை எடுங்கள் என்று பைனான்சியர் அன்புச்செழியனுக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினரான அசோக்குமார் கம்பெனி புரொடெக்ஷன்ஸில் இணை தயாரிப்பாளராக இருந்தார். அவர் மதுரையில் உள்ள அன்புச்செழியனிடம் கடன் வாங்கியதால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவும், பலமுறை அசோக்குமாரிடம் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அசோக்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தலைமறைவான அன்புச்செழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் கூறுகையில், அன்புச் செழியனுக்கு இந்த பேட்டியின் மூலம் நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம், அன்பு அண்ணே, நீங்கள் எங்க இருக்கீங்கனு தெரியலை. ஆனால் இந்த பேட்டி உங்களை வந்தடையும் என்று நம்புகிறேன். அசோக்குமாரின் தற்கொலைக்கு நீங்கள் ஒரு காரணமா இருந்திருக்கீங்க.
தவறான அறிக்கை
அதற்கு நீங்கள் பரிகாரம் தேட வேண்டுமே தவிர, ஓடி ஒளிவது சரியானதாக இருக்காது. நீங்கள் உங்களுடைய கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டீங்க. சசிகுமாரை விட உங்களை அதிக நேரம் சந்தித்தது அசோக் குமார்தான். அசோக்குமாரிடம்தான் அனைத்து பணப்பரிவர்த்தனைகளையும், பேப்பர்களையும் , பத்திரங்களையும் பெற்றுள்ளீர்கள்.
அப்ப ஏன் அசோக்குமாருக்கு போன்?
ஆனால் அசோக் குமார் யாரென்றே தெரியாது என்று கூறியிருக்கீங்க. யாரென்றே தெரியாமலா அசோக்குமார் மரணப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் உங்கள் அலுவலகத்திலிருந்து அவருடைய செல்போனிற்கு 6 முறை போன் செய்யப்பட்டிருக்கிறது. எதற்காக இதை மறைக்கிறீர்கள்.
நீங்களே வந்து சொல்லுங்கள்
சரி நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் தலைமறைவாக இருக்கீங்க. திரைத்துறையினரை சேர்ந்த யார் யாரோ வந்து உங்களை கடவுள் என்கிறார்கள், நல்லவர் என்கிறார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் எல்லாரும் இன்று உங்களுக்கு எதிராக பேசுகிறார்கள் என்பதை நீங்களே சொல்லுங்கள்.
சரியான முடிவை எடுங்க
சசிகுமாரும், அசோக்குமாரும் உங்களுடனஅ 10 ஆண்டுகாலம் வியாபார ரீதியில் தொடர்பில் இருந்ததற்கு இந்த சம்பவத்துக்கு நான் காரணமல்ல என்று ஆறுதலாக 4 வார்த்தை பேசியிருக்கலாமே. உங்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் இந்த வழக்கை மேலும் முடிவுப்படுத்துவது போல் பேசிக்கிட்டு இருக்கிறார்கள். என் கிட்ட அதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கு. ஒளிந்து விளையாடும் விளையாட்டை இத்தோடு நிறுத்திக் கொண்டு நீங்களே ஒரு சரியான முடிவை எடுப்பீர்கள் என நம்புகிறேன் என்றார் அமீர்.