ரஜினி முழு அரசியல்வாதியான பிறகு எங்கே குறை என சொல்கிறேன்... பாரதிராஜா பொளேர்!
பாதி அரசியல்வாதியாகியுள்ள ரஜினிகாந்த் முழு அரசியல்வாதியான பிறகு என்ன குறை என்று சொல்கிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பாதி அரசியல்வாதியாகியுள்ள ரஜினிகாந்த் முழு அரசியல்வாதியான பிறகு என்ன குறை இருக்கிறது என்பதை சொல்கிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
தமிழர்களின் உணர்வுகளை மீட்டெடுக்க அரசியல் சார்பின்றி ஒற்றுமையாக போராட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழர் கலை இலக்கிய பண்பாடு பேரவை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கப்பட்ட இந்த பேரவையானது தமிழ்நாட்டிற்கான கொடியை ஏந்தி சென்னை அண்ணா சாலையில் நேற்றைய தினம் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்களம் கண்டது.
பல்வேறு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கேட்டதன் அடிப்படையில் அந்தக் கட்சியின் தொண்டர்கள் தங்களின் கொடி ஏந்தாமல் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 780 பேர் கைது செய்யப்பட்டு காலையில் விடுதலை செய்யப்பட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாரதிராஜா, சீமான், வைரமுத்து உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம்
இந்நிலையில் பேரவையின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து பாரதிராஜா உள்ளிட்ட அமைப்பினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாரதிராஜா கூறியதாவது : காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழகம் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் கருப்புக் கொடி காட்டப்படும்.
வேறு போராட்டம் நடத்துவோம்
சென்னையில் ஏப்ரல் 20ம் தேதி நடக்கும் ஐபிஎல் போட்டியை நிறுத்த வேறுவிதமான போராட்டம் நடத்தப்படும். இனம், மொழி உணர்வோடு கட்சி வேறுபாடின்றி அனைவரும் காவிரி உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும். சீருடையில் இருந்த காவலர்களை தாக்கியது போராட்டக்காரர்கள் அல்ல என்று பாரதிராஜா தெரிவித்தார். அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய வினைக்கு எதிர்வினை எழுந்தது.
ரஜினி யாருக்காகவோ டப்பிங் பேசுகிறார்
போராட்டத்தின் போது என்ன நடந்தது என்று தெரியாமல் ரஜினி கருத்து சொல்லி இருக்கிறார். குறைந்தபட்சம் என்னை தொடர்பு கொண்டாவது என்ன நடந்தது என்று கேட்டிருக்கலாம், நானும் கைது செய்யப்பட்டேனே அது பற்றி ரஜினி எதுவுமே சொல்லவில்லையே, யாருக்காகவோ ரஜினி டப்பிங் பேசுகிறார் என்றும் பாரதிராஜா தெரிவித்தார்.
முழு அரசியல்வாதியான பிறகு சொல்கிறேன்
இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகையை தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை எதிர்க்குமா என்று பாரதிராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பாரதிராஜா பாதி அரசியல்வாதியாகி இருக்கும் ரஜினி முழு அரசியல்வாதியான பிறகு எங்கே குறை என்ன குறை என்பதைச் சொல்கிறேன் என்றார்.