இசை, சட்டப்பல்கலைக்கு துணைவேந்தரை நியமித்தது யார்?... இயக்குநர் பாரதிராஜா அரசுக்கு கேள்வி!
தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் துணைவேந்தரை நியமிக்கவில்லை என்றால் யார் நியமனம் செய்தார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் துணைவேந்தரை நியமிக்கவில்லை என்றால் யார் நியமனம் செய்தார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி பிரச்னை தீவிரமாக நடைபெற்று வரும் போது கன்னடரை துணைவேந்தராக நியமித்தது ஏன் என்று ஆளுநரிடம் பாரதிராஜா விளக்கம் கேட்டுள்ளார்.
திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்தனர். அப்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதற்கும், பிற 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆளுநருடனான சந்திப்பிற்குப் பின்னர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : துணைவேந்தர்களாக வெளி மாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டது ஏன் என்று ஆளுநரிடம் கேட்டோம். அதற்கு ஆளுநர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மட்டுமே தான் செய்ததாகவும் இசைக்கல்லூரி மற்றும் சட்டப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தமிழக அரசு செய்தது தான் என்று கூறினார்.
ஆளுநரிடம் கேள்வி?
காவிரி விவகாரம் பற்றி எரியும் போது கர்நாடகாவைச் சேர்ந்தவரை ஏன் துணைவேந்தராக நியமித்தீர்கள் என்று கேட்டோம். அதற்கு ஆளுநர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் நியாயமாக நடந்ததாக ஆளுநர் கூறினார். கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த அரசியலும் இல்லை என்றார்.
ஆளுநர் அளித்த விளக்கம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக 190 மனுக்கள் அகில இந்திய அளவில் பெறப்பட்டது. அவர்களில் 3 பேரில் இறுதி செய்யப்பட்டு அதில் இருந்து சூரப்பா தேர்வு செய்யப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.
நியமித்தது யார்?
இசைப்பல்கலைக்கழகத்திற்கும், சட்ட பல்கலைக்கழகத்திற்கும் யார் துணைவேந்தர்களை நியமனம் செய்தது. தமிழக அரசின் கவனத்திற்கு போகாமல் இந்த நியமனம் நடந்திருக்காது வெளிமாநிலத்தவரை யார் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.
போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்
இசைப்பல்கலைக்கழகத்திற்கு கேரளாவைச் சேர்ந்தவரும், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்தவரும் தமிழக அரசின் கவனத்திற்கு வராமலே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டார்களா?. இந்த உண்மைகளை தெரிந்து கொள்ள போராட்டம் நடத்தக் கூடத் தயங்க மாட்டோம் என்றும் பாரதிராஜா தெரிவித்தார்.