அறம் தவறிய அரசை மக்கள் தண்டிப்பார்கள்.. இயக்குநர் கவுதமன் காட்டம்!
அறம் தவறிய அரசை மக்கள் தண்டிப்பார்கள் என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அறம் தவறிய அரசை மக்கள் தண்டிப்பார்கள் என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு எதிர்ப்பவர்களை அச்சுறுத்தி வருகிறது என்றும் அவர் சாடினார்.
இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த இதுதொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
அவரை நேற்று தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர்கள் கண்டனம்
இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்த திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக இன்று பேட்டியளித்தனர். இதில் பாரதிராஜா, அமீர், பாலாஜிசக்திவேல், கவுதமன், கமலக்கண்ணன், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
என்னையும் கைது செய்யும்
அப்போது பேசிய இயக்குநர் கவுதமன் திருமுருகன் காந்திக்கு பிறகு என்னையும் போலீஸ் கைது செய்யும் என்றார். திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது குழந்தைத்தனமானது என்றும் சாடினார்.
மத்திய அரசு சொன்னதால்..
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மத்திய அரசு சொன்னதால் தான் தமிழக அரசு கைது செய்தது என்றும் குற்றம் சாட்டினார்.
பாலைவனமாக்க முயற்சி
தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என மத்திய அரசு எண்ணுவதாகவும் அவர் கவுதமன் குற்றம்சாட்டினார்.