7 பேர் விடுதலை... பாவத்தையும் சாபத்தையும் வாங்குகிறது பாஜக!- இயக்குநர் வ கௌதமன்
வேலூர்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் பாவத்தையும், சாபத்தையும் பா.ஜ.க வாங்குகிறது என வ இயக்குநர் கௌதமன் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரை இயக்குநர் கௌதமன் மற்றும் மாணவர் சங்கத்தினர் இன்று (3-ம் தேதி) சந்தித்துப் பேசினர்.
இதன் பின்னர் இயக்குநர் கௌதமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இந்த சந்திப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுதான். முதல்வர் இவர்களை விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டதற்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு இல்லை.
சிறையில் உள்ள 7 பேரும், கண்டிப்பாக முதல்வர் எங்களை விடுவிப்பார் என்ற முழு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார்கள். 'கடந்த 26 ஆண்டுகளாக எப்போது விடுதலை ஆவோம் என்று வேதனை அனுபவித்து வருகிறோம். விடுதலையானால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி,' என்றனர்.
மத்திய அரசியல்வாதிகள், இவர்கள் விடுதலைக்கு தடை சொல்வதை பெரும் சாபமாக நினைக்க வேண்டும். அதேபோல், காங்கிரஸ் தமிழர்களை கொன்று குவிக்கும் அகோர பசியில் இருந்து இன்னும் மாறவில்லை. மாநில மற்றும் மத்திய அரசியல்வாதிகள் தயவு செய்து இதை அரசியலாக்க வேண்டாம். விடுதலைக்கும் தடை போட வேண்டாம்.
சஞ்சய் தத் 220 பேரை கொலை செய்ய உதவியாக இருந்தார். அவருக்கு, 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு, 5 ஆண்டிலேயே விடுதலையானார். நெற்றியில் குங்குமம் வைத்திருந்தால்தான் விடுதலை அடைய முடியுமா?
இன்று நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜூன், அந்த 7 பேரை விடுவிக்க முடியாது என்று கூறுவது மனதை காயப்படுத்துகிறது. பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட இல்லாமல் இருக்கிறது. வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரு இடம் கூட வெற்றி பெறாது. ஏன் என்றால் அந்த 7 பேரின் விடுதலையில் பாவத்தையும், சாபத்தையும் வாங்குகின்றனர்,'' என்றார்.