ஸ்டெர்லைட்: சென்னையில் மறியல் போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் கைது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னையில் மறியல் போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் கைது
Recommended Video
சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை தலைவர் உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் 100வது நாளை எட்டியதையொட்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க பொதுமக்கள் பேரணி சென்றனர்.
தடையை மீறி நடந்த இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது போலீஸார் தடியடி தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் தன்னெழுச்சியாக இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த வாகனங்கள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் கூட்டத்தைக் கலைக்க காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் இயக்குநர் கவுதமன் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை தலைவர் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
மேலும், மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு சாலை மறியல் செய்ய முயன்றதால் இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.