2 நடிகர்களும் மத்திய அரசின் கைக்கூலிகள்.. இயக்குநர் கவுதமன் கடும் தாக்கு
சென்னை: நடிகர்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று திரைப்பட இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது இதற்கு முன்பு எந்த பிரச்சினைக்காவது நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்களா என்ற கேள்வியை மக்கள் கேட்பார்கள்.
மாணவர்கள் பிரச்சினைக்கு வந்தீர்களா, மீனவர்கள் பிரச்சினைக்கு வந்தீர்களா, விவசாயிகள் பிரச்சினைக்குத்தான் வந்தீர்களா என்பதையெல்லாம் மக்கள் கேட்பார்கள்.
ரஜினிகாந்த்துக்கும், கமல்ஹாசனுக்கும் பிரதமர் மோடி, நெருக்கமானவர்கள். அவர்கள் வீடுகளுக்கு வந்து செல்லும் அளவுக்கு பழக்கமானவர். மோடியிடம் பேசி தமிழர்கள் பிரச்சினை எதற்காவது இவ்விருவரும் தீர்வு கண்டுள்ளார்களா?
மத்திய அரசின் கைக்கூலிகளாகதான் இருவரும் அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை இளைய சமுதாயம் நன்கு தெரிந்து வைத்துள்ளது. நீங்கள் வாருங்கள், நாங்களும் காத்திருக்கிறோம். பெரும் தோல்வியை உங்களுக்கு பரிசாக வழங்குவோம். இவ்வாறு கவுதமன் தெரிவித்தார்.