போனில் ‘புறம்போக்கு’ படத்திற்குப் பாராட்டு... வேலூர் சிறையில் பேரறிவாளனைச் சந்தித்தார் ஜனநாதன்!
வேலூர்: திரைப்பட இயக்குநர் ஜனநாதன் வேலூர் சிறையில் ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளி பேரறிவாளனைச் சந்தித்துப் பேசினார்.
இயற்கை, பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் ஜனநாதன். இவர் நேற்று பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளுடன் வேலூர் சிறைக்கு சென்றார். அங்கு ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளி பேரறிவாளனை அவர் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
பேரறிவாளனின் போன்...
சிறையிலிருக்கும் ஒருவருடன், பத்து நாட்களுக்கு ஒருமுறை பத்து நிமிடங்கள் மட்டுமே போனில் பேச முடியும். ஒரு மாதத்திற்கு முன்பு பேரறிவாளன், அவரது அம்மாவிடம் கூட பேசாமல் எனக்கு போன் பண்ணினார்.
புறம்போக்கு படம்...
அப்போது, புறம்போக்கு படத்தை பற்றி பேசினார். தன்னை போன்ற சிறைவாசிகளுக்கும், தூக்கு தண்டனை கைதிகளின் வாழ்க்கைக்கும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.
மீண்டும் சந்திப்பு...
ஏற்கனவே ஒருமுறை அவரை சந்திருக்கிறேன். மீண்டும் சந்திக்க வேண்டுமென தோன்றியது. அதனால், அற்புதமம்மாள் உடன் சென்று சந்தித்தேன். ஒரு மணி நேரம் எங்களுடன் பேசினார்.
தூக்கிற்கு எதிரான கருத்து...
அப்போது, 'திரை ஊடகம் மூலம் தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்தை சொல்ல முன்வந்தது மக்களிடையே நிறைய மாற்றத்தை உண்டாக்கி உள்ளது. விகடன் திரை விமர்சனத்தில் சொல்லியது போல் சில லட்சம் பேரையாவது தூக்கு தண்டனைக்கு எதிரான நிலையை எடுக்க வைத்திருக்கும் உங்கள் படம்' என்றார்.
என் வெற்றி...
அதுவே என் படைப்புக்கான வெற்றி. சீக்கிரம் அவர் விடுதலையாக வேண்டும்" என்றார்.
விடுதலையை எதிர்பார்த்து...
இது குறித்து பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் பேசும்போது " பேரறிவாளன் சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறி வருகிறான். விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
மிச்ச வாழ்க்கை...
25 ஆண்டுகளை சிறையிலேயே பறிகொடுத்து விட்டான். தற்பொழுது உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பில்தான் மிச்ச வாழ்க்கை அடங்கியிருக்கிறது" என்றார்.
நடிக்க வாய்ப்பு...
இந்த சந்திப்பின் போது, "பேரறிவாளனுக்கு விருப்பம் இருந்தால், தனது அடுத்த படத்தில் அவர் நடிக்கலாம்' என ஜனநாதன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.