இயக்குநர் கே.பாலச்சந்தர் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை
சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் உடல் நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடுள்ளார். அவரது உடல் நிலை மேம்பட்டுள்ளதாக பாலச்சந்தர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
பழம்பெரும் இயக்குநரான கே.பாலச்சந்தர், இயக்குநர் சிகரம் என்று புகழப்படுபவர். தமிழ் திரையுலகில் ஜாம்புவான்களாக விளங்கும், ‘கமல்ஹாசன்' மற்றும் ‘ரஜினிகாந்த்' எனப் பல முன்னணி நடிகர், நடிகைகளைத் திரையுலகிற்கு தந்தவர் பாலச்சந்தர். சமீபகாலமாக படம் இயக்காமல் ஓய்வில் இருந்து வந்த பாலச்சந்தருக்கு இன்று பிற்கபல் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மைலாப்பூரிலுள்ள காவேரி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாலச்சந்தர் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவேரி ஆஸ்பத்திரியின் மூத்த டாக்டரான வெங்கடாசலம் கூறியுள்ளதாவது: 84 வயதான பாலச்சந்தர் வயோதிகம் சார்ந்த பிரச்சினைகளாலும், காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போதைய நிலையில் அவரது உடல் நலம் சிறப்பாக உள்ளது. தேவைப்படும் சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வெங்கடாசலம் தெரிவித்தார். இந்த தகவலை காவேரி மருத்துவமனை பத்திரிகை செய்தியாகவும் அனுப்பியுள்ளது.