ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்- சீடர்கள் ரஜினி, கமல் மீட்டு உதவுவார்களா?
மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் ஏலத்துக்கு வந்துள்ளது.
Recommended Video
சென்னை: மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகத்தை யூகோ வங்கி ஏலத்தில் விடுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் கே.பாலச்சந்தரின் குடும்பம் கடனில் சிக்கித் தவிக்கும் போது அவரது சீடர்கள் என மூச்சுக்கு முந்நூறு முறை உச்சரிக்கும் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்களே என்கிற வேதனையும் வெளிப்படுத்தப்படுகிறது.
கமல்ஹாசனையும் ரஜினிகாந்தையும் நடிகர்களாக வார்த்தெடுத்தவர் கே. பாலச்சந்தர். இதனால்தான் அவரை தங்களது குருநாதர் என கமலும் ரஜினியும் அழைத்து வருகின்றனர்.
கேபி வீடு, அலுவலகம்
இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் நேற்று யூகோ வங்கி ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், கே. பாலச்சந்தரின் வீடு மற்றும் கவிதாலயா புரொடக்சன்ஸ் அலுவலகம் ஆகியவை ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் ரூ1.36 கோடி
கே.பாலச்சந்தரின் குடும்பம் ரூ1.36 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் யூகோ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. திரை உலகில் ரூ1.36 கோடி கடன் என்பது மிக மிக சொற்பமானது.
கடனில் தத்தளிப்பு
அதுவும் கமல், ரஜினிகாந்துக்கு இந்த தொகை மிக மிக சொற்பமானது. கே.பாலச்சந்தரின் குடும்பம் கடனை கட்ட முடியாமல் இத்தனை நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்ததைத்தான் இந்த விளம்பரம் வெளிப்படுத்தியுள்ளது.
கமலும் ரஜினியும் மீட்பார்களா?
இதுவரை குருநாதரின் குடும்பத்துக்கு உதவாமல் கமல்ஹாசனும் ரஜினியும் இருந்திருக்கலாம். இப்போது கே. பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் பகிரங்க ஏலத்துக்கு வந்துவிட்டது. இனியாவது சீடகோடிகள் வெறும் ரூ1.36 கோடி கடனை அடைத்து குருநாதரின் வீடு, அலுவலகத்தை மீட்பார்களா? என்பதுதான் எதிர்பார்ப்பு.