வெள்ளத்தில் சிக்கிய டைரக்டர் மகேந்திரன்.. மகன் கொடுத்த தகவலின் பேரில் மீட்ட போலீஸ்
சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் சி. மகேந்திரன் வெள்ளத்தில் வீட்டில் சிக்கிக் கொண்டார். அவரது மகன் ஜான் ரோஷன் வெளிநாட்டிலிருந்து கொடுத்த தகவலின் பேரில் சென்னை போலீஸார் விரைந்து சென்று அவரை பத்திரமாக மீட்டனர்.
இயக்குநர் மகேந்திரன் தனது மனைவியோடு பள்ளிக்கரணைப் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் ரோஷன். இவர் தனது குடும்பத்தோடு தனியாக வசித்து வருகிறார்.
சென்னையை உலுக்கிய வெள்ள பாதிப்பிலிருந்து மகேந்திரனும் தப்பவில்லை. அவர் தனது மனைவியோடு வீட்டுக்குள் சிக்கிக் கொண்டார். அவர்களால் வீட்டை விட்டு வர முடியவில்லை. மகேந்திரனின் மகனும் அப்போது ஊரில் இல்லை. வெளிநாட்டில் இருந்தார். இதையடுத்து தனது தந்தை நிலை குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைத் தொடர்பு கொண்டு அவர் தகவல் தெரிவித்து மீட்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீஸ் மீட்புப் படை விரைந்து சென்றது. மகேந்திரனும், அவரது மனைவியும் பத்திரமாக இருப்பதை அறிந்தனர். அதேசமயம், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அவர்களை புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் ஜான் ரோஷனுக்கு அனுப்பி வைத்து அவர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.