அறம் சார்ந்து எடுக்கப்பட்ட படம் சலீம்.... இயக்குநர் ராம் வாழ்த்து!
"பொறந்ததல இருந்து போஸ்ட் மார்ட்டம் வரைக்கும் பணம் பணம்னு ஏண்டா..." என்று தனியார் மருத்துவமனையைக் கேள்விக் கேட்கும் மருத்துவர் சலீம்.
எந்த தீவிரவாத இயக்கம் எனக் கேட்கும் காவல்துறையிடம் 'என் பேருதான் பிரச்சனைன்னா என்ன விஜய்ன்னு கூப்பிடுங்க இல்ல ஆண்டனின்னு கூப்பிடுங்க', என்று, சிறுபான்மை இனத்தின் குரலாய் ஒலிக்கிறது சலீமின் குரல்.
இஸ்லாமியர்களை எதிர் நிலையில் சித்தரிக்கும் தமிழ் திரைப்படச் சூழலில் இஸ்லாமியரை கதையின் நாயகனாக உருவாக்கியும் படத்தின் தலைப்பாக அக்கதை நாயகனின் பெயரையே சூட்டியும் ஒரு படம் வெளி வருவது என்பது மிக நல்ல தொரு செயல்பாடு.
நல்லவனை, பிழைக்கத் தெரியாதவனை கதாநாயகனாக முன் வைத்து அறம் சார்ந்து படம் எடுப்பது என்பது 'ஓல்டு வேவ்' சினிமாவாகப் பார்க்கப் படக்கூடிய இந்தக் காலத்தில் 'சலீம்' எந்த 'வேவ்' வைப் பற்றியும் கவலைப்படாமல் அறம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் அது அலுப்பில்லாமல் பார்வையாளர்களால் ரசித்து கொண்டாடப்படுகிறது என்பதும் (நான் பார்த்தது சாலிகிராமத்து எஸ்எஸ்ஆர் பங்கஜத்தில்) மகிழ்ச்சித் தரக்கூடிய ஒன்று.
"என் வி நிர்மல் குமார்" இயக்குநர் பாரதிராஜாவிடம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்தவர். இவரின் முதல் படம் இது. இரண்டாம் பகுதியில் வெகு சொற்ப கதாபாத்திரங்கள், ஒரே இடம் என்று ஏகப்பட்ட சிக்கல்களை ரொம்ப அழகாகக் கையாண்டு இருக்கிறார். வாழ்த்துக்கள் தோட்டாத்திரி.
'சலீம்' திரையரங்கில் பார்க்க வேண்டிய திரைப்படம்.
பிரியங்களுடன்
ராம்.
-விஜய் ஆன்டனியின் இரண்டாவது படம் சலீமை திரையரங்கில் பார்த்த பிறகு, இயக்குநர் ராம் வெளியிட்டுள்ள பாராட்டுக் கடிதம் இது.