பைனான்சியர் அன்புச்செழியன் உத்தமர்... வக்காலத்து வாங்கும் இயக்குனர் சீனுராமசாமி!
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உத்தமர் என்று இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உத்தமர் என்று இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனரும், நெருங்கிய நண்பருமான அசோக்குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் காரணம் என்று அசோக்குமார் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பணம் கேட்டு அன்புச்செழியன் நெருக்கடி தருவதோடு, குடும்பத்து பெரியவர்கள், பெண்களையும் கடத்திச் சென்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் அசோக்குமார் தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அசோக்குமாரின் தற்கொலை வாக்குமூலக் கடிதத்தின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள அன்புச்செழியனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக திரைத்துறையினர் ஒன்று திரண்டுள்ளனர். அவர் மீது இயக்குனர்கள் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
எம்.ஜீ.ஆர், சிவாஜீ, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே...
— Seenu Ramasamy (@seenuramasamy) November 23, 2017
அவருடைய பதிவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி கூடல்நகர், தென்மேற்குப் பருவக்காற்று,தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.