விவசாயிகளை காப்பாற்ற.. களப்போராளிகள் தேவை.. இயக்குநர் தங்கர் பச்சான் அழைப்பு
விவசாயிகளை காப்பாற்ற திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் புது அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை: விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க இயக்குநர் தங்கர் பச்சான் அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தங்கர் பச்சானின் பதிவு:
உடலில் தீப்பிடித்துக்கொண்டவனை காப்பாற்ற எவரும் வரமாட்டார்கள் என்பது போலத்தான் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வர மறுக்கிறார்கள்.
சுயலாபத்திற்காக இணைய வேண்டாம்
நமது இயக்கம் அரசியல் சார்பற்ற இயக்கம். அரசியல் கட்சிகளில் இணைந்தால் பலனை அடையலாம் என்பது போல சுயலாப சிந்தனைகளோடு நமது இயக்கத்தில் இணைய வேண்டாம். மக்கள் நலன் குறித்து சமூக அக்கறையுள்ளவர்கள் மட்டும் இயக்கத்தில் இணைய வேண்டுகிறேன்.
களப்போராளிகள் தேவை
நமது இயக்கத்தில் இதுவரை விண்ணப்பித்தவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த இயக்கத்திற்கு தேவைப்படுபவர்கள் அரசியல் கட்சிகளில் உள்ளதுபோல் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் அல்ல. களப்போராளிகளும், பயிற்சியாளர்களும் தான்.
நேரில் சந்திப்பு
இயக்கத்தின் முதன்மை உறுப்பினர்கள் ஒன்று கூடி செயல்திட்டங்கள் தீட்டி அதனை ஆவணப்படுத்தும் பணிகள் நிறைவடையும் வேளையில் இருக்கிறது. ஒரு பெயரை இயக்கத்திற்கு தேர்வு செய்து அதனைப் பதிவு செய்வதற்காகவும் களப்பயிற்சிக்காகவும், பணிக்காகவும், போராட்டத்திற்காகவும் யார் யார் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்யவும், தமிழகம் முழுவதிலும் மூன்று இடங்களில் (சென்னை, மதுரை, கோயம்புத்தூர்) உங்களை நேரில் சந்திக்க விரும்புகின்றேன்.
எங்கே.. எப்போது
யார் யார் வர விருப்பம் தெரிவிக்கின்றீர்கள் என்பதை பொறுத்தே சந்திக்கும் அரங்கமும், நாளும் இறுதி செய்யப்படும். ஒரு அரசு செய்ய முடியாததை, எவ்வளவு பெரிய நிறுவனமும் செய்ய முடியாததை நம் இயக்கம் செய்து காண்பித்து இந்த நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழப் போகிறது.
உழவை மீட்டுப்போம்..
அதனை நிகழ்த்திக்காட்டும் கட்டாயப்பணியில் தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு இளைஞனும் இணைந்து அழிந்துவரும் உழவுத் தொழிலை மீட்டெடுத்து இலாபகரமானதாக்கி நமது இளைய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். மறவாமல் உங்களின் பதிலைத் தெரிவிப்பதைப் பொறுத்துதான் அடுத்தக்கட்டப் பணியைத் தொடர முடியும்.
இணைவோம்! செயல்படுத்துவோம்! உழவே தலை என்பதை நிலை நாட்டுவோம்!!
இணைய..
இயக்கத்தின் புலனம் எண் (WHATSAPP) : +91 9940695337 இயக்கத்தில் இணைவதற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இவ்வாறு தங்கர் பச்சான் கூறியுள்ளார்.