'15 வருட நண்பனான எனக்கே துரோகம் செய்த சுந்தர். சி'.. இயக்குநர் வேல்முருகன் போலீசில் புகார்!
சன்டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியல் கதையை தம்மிடம் இருந்து வாங்கிக் கொண்டு பணம் தராமல் சுந்தர்.சி மிரட்டுவதாக இயக்குனர் வேல்முருகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை : நந்தினி தொடருக்கான கதையை பெற்றுக்கொண்டு சுந்தர்.சி பணம் தர மறுப்பதாகவும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் இயக்குநர் வேல்முருகன் சென்னை மாநகர காவல்ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நந்தினி சீரியலை ராஜ்கபூர் இயக்கி வருகிறார். இந்தத் தொடருக்கான கதையை சுந்தர்.சி எழுதி வருகிறார். இந்நிலையில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளரான வேல்முருகன் என்பவர் சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : நந்தினி தொடருக்கான கதை என்னுடையது, இந்தக் கதையை சுந்தர். சி என்னிடம் இருந்து வாங்கினார்.
கதைக்காக ரூ. 50 லட்சமும், தொடர்ந்து திரைக்கதை எழுதுவதற்காக மாதம் ரூ. 1 லட்சம் தருவதாகவும் உறுதி அளித்தார். 15 வருட நண்பர் என்பதால் நம்பிக்கையின் பேரில் நானும் கதையைக் கொடுத்தேன். கதையில் தன்னுடைய பெயர் இருந்தால் தான் நிறுவனத்திடம் பணம் பெற வசதியாக இருக்கும் என்று சொன்னார் அதற்கும் ஒப்புகொண்டேன்.
பேசியபடி பணம் தராமல் மோசடி
இதைத் தொடர்ந்து எனக்கு மாதம் ரூ. 1 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்தார், ஆனால் கடந்த 5 மாதங்களாக அந்த மாத சம்பளத்தைத் தரவில்லை. இதே போன்று கதைக்காக பேசப்பட்ட ரூ. 50 லட்சம் பணத்தையும் தரவில்லை.
பணம் கேட்டால் மிரட்டல்
பணத்தை கேட்டால் இந்த கதைக்கான பணம் அவ்வளவு தான், நான் ஒரு பெரிய படம் எடுக்கப்போகிறேன் அதில் பணியாற்றுங்கள் அதற்குப் பணம் தருகிறேன் என்கிறார். அதிலும் பணியாற்றுகிறேன், நந்தினி கதைக்காக பேசிய பணத்தைத் தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அடியாட்களை வைத்து என்னை மிரட்டுகிறார்.
சத்தியம் செய்யுங்கள்
நான் சுந்தர்.சி யுடன் 15 ஆண்டுகளாக இருந்தவன், ஆனால் எனக்கே அவர் துரோகம் செய்துவிட்டார். நான் என்னுடைய குடும்பத்தாரை அழைத்து வருகிறேன், சுந்தர். சியும் அவரடைய குடும்பத்தை எந்த கோயிலுக்கு வேண்டுமானாலும் அழைத்து வந்து நந்தினி கதை தன்னுடையது தான் என்று சத்தியம் செய்யட்டும் பார்க்கலாம்.
கதையைத் திருடுவது தான் வேலை
அரண்மனை திரைப்பட கதை கூட அவருடையது அல்ல, ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தின் கதையைத் திருடித் தான் அவர் அந்தப் படத்தை எடுத்தார். எங்கிருந்தாவது கதையை எடுத்து தன்னுடைய பெயரில் படம் எடுப்பது தான் அவருடைய வேலை. எனக்கு அதிக மிரட்டல்கள் வருவதாலேயே பாதுகாப்பு கோரியும் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளேன் என்று அவர் கூறினார்.