ஜெ, கருணாநிதிக்கு 'ரெட் கார்பெட்'... மாற்று திறனாளிகளுக்கு அலட்சியம்.. வாக்குச் சாவடிகள்!
சென்னை: சென்னையில் பல வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் வந்து வாக்களித்தபோது விஐபிகளுக்கு மட்டும் ராஜ மரியாதை கொடுக்கப்பட்ட காட்சிகளையும் மக்கள் காண நேர்ந்தது.
குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டது. அதேபோல திமுக தலைவர் கருணாநிதிக்கும் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டன.
அவர்கள் மட்டுமல்லாமல் திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்புச் சலுகைகள் தரப்பட்டது மக்களை முகம் சுளிக்க வைத்தது.
முதல்வர் ஜெயலலிதா வாக்களித்த ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்கு்சாவடியிலும், கருணாநிதி வாக்களித்த கோபாலபுரம் வாக்குச்சாவடியிலும் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு தரப்பட்டது. இதனை அங்கு வாக்களிக்க வந்திருந்த மற்ற வாக்காளர்கள் பலரும் முகம் சுளிக்கப் பார்த்தனர்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரபலங்களுக்கு சிறப்பு வரிசை அமைக்கப்படாது என முன்னதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனை மதித்து பல பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆனால், மற்ற சில விஐபிக்களோ வரிசையில் நிற்காமல் நேராக சென்று வாக்களித்தனர். இதுவும் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதேபோல், சைதாப்பேட்டையில் ஒரு வாக்குச் சாவடியில் மாற்றுத் திறனாளிகள் பலர் வாக்களிக்க வந்தனர். ஆனால் வீல் சேர் எதுவும் அங்கு இல்லை . மேலும் வாக்களிக்க வசதியாக அவர்களுக்கு உதவி செய்யவும் ஆட்கள் யாரும் இல்லை.
அந்த இடத்தில் ஒரு சாய்தளப் பலகை வசதி செய்து தரப்பட்டிருந்தாலும் கூட அதை மூடி வைத்திருந்தனர். படிகள் வழியாகவே செல்லுமாறு வலியுறுத்தப்பட்டனர்.
இதனால் மிகக் கடுமையான சிரமங்களை மாற்றுத் திறனாளிகள் சந்திக்க நேரிட்டது. கடுமையான சிரமத்திற்கு மத்தியில் படியேறிப் போய் பலர் வாக்களித்ததையும் காண முடிந்தது.
சாதாரண மக்களின் வாக்குகள் மூலமே அரசியல் தலைவர்கள் பதவிகளைப் பெறுகின்றனர். அதே போல் மக்களாலேயே சினிமா நடிகர்களும் பிரபலம் ஆகின்றனர். ஆனால், அவ்வாறு பதவிகளைப் பெற்றவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதும், அவர்களை உயரத்திற்கு கொண்டு சென்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான சலுகைகள் மறுக்கப்படுவதற்கும் இந்த வாக்குச்சாவடி காட்சிகளே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.