ஆபீஸ் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி பெண் பலி - பஸ் டிரைவர் கைது
சென்னை: சென்னையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகத்தை அடுத்த ஒரத்தி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகள் பானுப்பிரியா. மாற்றுத் திறனாளியான இவர் செங்கல்பட்டு, மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை அவர் கம்பெனி பஸ்சில் இருந்து வேலைக்கு செல்ல இறங்கினார். பஸ்சின் முன் பக்கமாக பானுப்பிரியா சென்ற போது டிரைவர் கவனிக்கவில்லை. அவர் பஸ்சை கவனிக்காமல் இயக்கிய போது சக்கரத்தில் பானுப்பிரியா சிக்கிக் கொண்டார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ் டிரைவர் பெருமாளை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.