கோவை கலெக்டர் அலுவலகத்தின் அலட்சியம்.. காது கேளாத முதியவர் இரவு வரை உணவின்றி காத்துகிடந்த அவலம்!
இரவு வரை மனுநீதி முகாமில் உணவின்றி முதியவர் காத்து கிடந்துள்ளார்.
Recommended Video
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காது கேளாத 85 வயது முதியவரை அதிகாரிகள் காத்திருக்க கூறிய நிலையில் இரவு வரை உணவின்றி காத்திருந்த அவலம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் மனு நீதி நாள் முகாம் நடைபெறும். அந்நாட்களில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்குவர்.
இந்த நிலையில் நேற்று மனு நீதி நாளை முன்னிட்டு கோவை சோமனூர் அடுத்த ஊஞ்சம்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயது முதியவரான போஜராஜன் என்பவர் முதியோர் உதவி தொகை பெறுவதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மனு நீதி நாள் முகாமில் தனது மனுவையும் அளித்துள்ளார். மனுவை பரிசீலித்த அதிகாரிகள் நாளைய தினம் (இன்று) வட்டாட்சியர் வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நாளை வரவும் எனவும் கூறியுள்ளனர்.
ஆனால் தனக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாக முதியவர் கூறியதை தொடர்ந்து, அங்கேயே காத்திருந்து ஓய்வூதியம் பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள் தனக்கு ஓய்வூதியம் வழங்குவார்கள் என நம்பி இரவு 9 மணி வரை ஆட்சியர்அலுவலகத்தின் ஒரு பகுதியில் முதியவர் காத்துக் கொண்டே இருந்தார். முதியவர் நீண்ட நேரம் அங்கிருப்பதை கண்ட அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் சிலர் காரணம் கேட்டறிந்தனர். பின்னர் அவரது விலாசத்தை பெற்று அவரின் மகனிடம் முதியவரை ஒப்படைத்தனர்.
உதவி கேட்டு வரும் பொதுமக்களை அரசு அதிகாரிகள் காக்க வைப்பதும் அலைக்கழிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. தள்ளாத வயதிலுள்ள காது கேளாத முதியவரை காத்திருக்க வைத்த அதிகாரி யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.