கனமழை எச்சரிக்கை.. தமிழகம் முழுக்க தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!
கனமழை எச்சரிக்கையை அடுத்து பேரிடர் மீட்பு படை தமிழகத்தில் தயார் நிலையில் உள்ளது.
சென்னை: கனமழை எச்சரிக்கையை அடுத்து பேரிடர் மீட்பு படை தமிழகத்தில் தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இன்றில் இருந்து நாளை வரை இந்த கனமழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இதனால் தற்போது தமிழகம் முழுக்க பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பயிற்சி பெற்ற வீரர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனர். நேற்று இவர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தினார்கள். மழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ள தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், திருவள்ளூர், ஈரோடு பகுதிகளில் ஒத்திகை நடத்தினார்கள்.
பேரிடர் உதவிகளுக்கு சிறப்பு உதவி எண் 077 என்ற டோல் பிரீ எண் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் எல்லா போலீஸ் நிலையங்களிலும் இதற்காக தனியே போலீசார் ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பேரிடர் குறித்த புகார்களை கவனிக்க உள்ளார்.
எல்லா மாவட்ட கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.