கோவை என்எஸ்எஸ் மாணவியை "கொன்ற" பேரிடர் பயிற்சியாளருக்கு நீதிமன்றக் காவல்
கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின்போது மாணவியை பிடித்து தள்ளியதால் அவர் உயிரிழந்த வழக்கில் பேரிடர் பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
Recommended Video
கோவை: கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின்போது மாணவியை பிடித்து தள்ளியதால் அவர் உயிரிழந்த வழக்கில் பேரிடர் பயிற்சியாளர் ஆறுமுகத்துக்கு வரும் 27-ஆம் தேதி நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. இதில் தீப்பிடிக்கும் போது தப்பிப்பது எப்படி என்பது தொடர்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
அப்போது 3-ஆவது மாடியிலிருந்து மாணவர்கள் குதித்தனர். அவர்களை கீழே வலை விரித்து கொண்டு தயாராக இருந்த மாணவர்கள் பிடித்து கொண்டனர்.
இந்நிலையில் மாணவி லோகேஸ்வரி குதிப்பதற்கு பயந்தார். அப்போது ஆறுமுகம் எவ்வளவு சொல்லியும் கேட்காததால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஆறுமுகம், லோகேஷ்வரியை பிடித்து தள்ளிவிட்டார்.
இதில் கழுத்து மற்றும் தலை பகுதியில் பலத்த காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆலாந்துறை போலீஸார் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் மரணம் விளைவித்தல் பிரிவில் (304) பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பிறகு ஆறுமுகத்தை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 ல் பொறுப்பு நீதிபதி ஞானசம்பந்தம் முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 15 நாள் அதாவது 27 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக ஆறுமுகத்தை 7 நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.