டிஸ்சார்ஜ் எப்போது என்பதை ஜெயலலிதாவே முடிவெடுப்பாராம்.. அப்பல்லோ தலைவர் ஏன் அப்படி சொன்னார்?
உடல் நலம் தேறிய ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே அறிவிப்பார் என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் கூறியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
சென்னை: எப்போது வீடு திரும்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவே முடிவு செய்வார் என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, உடல்நல குறைவின் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.வி.தேவராஜன் எழுதிய மருத்துவ புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
முழுமையாக குணமடைந்துவிட்டார்
விழா முடிந்தபின் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து டாக்டர் பிரதாப் சி.ரெட்டியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது: முதல்வருக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. கடவுளுக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் வேகமாக குணம் அடைந்து வருகிறார். அவர் மிகவும் மனநிறைவோடு இருக்கிறார். மன நிறைவு என்பதற்கு நான் சொல்லும் பொருள் அவர் முழுமையாக குணம் அடைந்துவிட்டார். அவரும் நாங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவது என்னவென்றால், அவர் நன்றாக குணம் அடைந்துள்ளதுடன், தான் அடைந்துள்ள முன்னேற்றத்தை அவரே கண்காணிக்கிறார்.
எல்லாவற்றும் மேல் கடவுள்
மருத்துவமனை செய்தது ஒரு பங்கு என்றால், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அவர் குணம் அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தது மறுபக்கம் பலனளித்தது. அந்த பிரார்த்தனைகள் அவரை பூரண குணம் அடைய வைத்து உள்ளது. பிரார்த்தனைகள்தான் அவர் உடல் நலம் தேற மிகவும் உதவிகரமாக இருந்தது.
அவரே சொல்வார் என எதிர்பார்ப்பு
அவர் எப்போது வீடு திரும்புவார் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஜெயலலிதாவும் கூட தான் எப்போது வீடு திரும்புவது என்பது பற்றியும், மக்கள் தனக்கு கொடுத்த பொறுப்பை எப்போது நிறைவேற்றலாம் என்றும் ஆசையோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவர் எப்போது சாதாரண வார்டுக்கு போவார்? எப்போது வீடு திரும்புவார்? என்பது பற்றியெல்லாம் அவர் தான் முடிவு செய்வார். அவரை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். தான் எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவரே விரைவில் எங்களிடம் கேட்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
டிஸ்சார்ஜ் அல்லது செக்-அவுட்?
பிரதாப் ரெட்டியின் பேட்டியை கேட்டதும், மருத்துவமனையிலிருந்து நோயாளியை டிஸ்சார்ஜ்தானே செய்வார்கள், இவர் என்னவோ ஜெயலலிதா, செக்-அவுட் செய்துவிட்டு போகப்போவதை போல கூறுகிறாரே என சொல்லி வியந்தார் ஒரு சக பத்திரிகையாளர். டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள செய்தியின் தலைப்பில் "டாக்டர்களையும், நர்சுகளையும் ஜெயலலிதா கட்டுப்படுத்துகிறார்-அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர்.ரெட்டி சொல்கிறார்" என கூறியுள்ளது. நோய் குணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டால், ஒரு நிமிடம் கூட அதற்கு மேலும் மருத்துவமனையில் நோயாளியை வைத்திருப்பது மருத்துவ தர்மத்திற்கு எதிரானது என்பார்கள். பிற நோயாளிகளை அட்மிட் செய்ய ஒரு பெட் கிடைக்கும் என்பதும் அதற்கு காரணம்.
சுற்றி, சுற்றி சொல்ல காரணம்?
அப்பல்லோவிலோ, நோயாளியே விரும்பி வெளியேறும்வரை காத்திருக்கப்போவதாக கூறியுள்ளார் மருத்துவமனை தலைவர். இதை நேரடியாக சொல்லாமல், விக்ஸ் என்பதை சுற்றி சுற்றி எழுதும் டாக்டரை போல கூறியுள்ளார் ரெட்டி. ஜெயலலிதா அட்மிட் ஆகியுள்ளதால், ஏகப்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு திருப்பியனுப்பப்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அம்மா மனமிறங்குவார்களா என்பதுதான் அப்பல்லோவின் எதிர்பார்ப்பாக இருக்குமோ?