குலசேகரத்தில் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படுமா? மனோ தங்கராஜ் கேள்வி
குலசேகரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைப்படுத்துவது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
பத்மநாபபுரம் : குலசேகரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து சட்டசபை உறுப்பினர் மனோ தங்கராஜ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதிலளித்தார்.
தமிழக சட்டசபையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பத்மநாபபுரம் தொகுதி எம் எல் ஏ மனோதங்கராஜ், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர் பேசுகையில், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலசேகரம் தினசரி சந்தையில் அதிகமாக குப்பைக்கழிவுகள் சேருவதால் அப்பகுதியில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் எழுவதுடன் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பெரும் அசவுகரியம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் தீர்வு எட்டப்படவில்லை. குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட கழிவுகளை ஒழிக்கும் வசதி அந்த பேரூராட்சிக்கு இல்லாததால், குப்பை கழிவுகளை குலசேகரம் தினசரி சந்தை பகுதியின் ஒரு புறத்தில் கொட்டி வருகின்றனர்.
இதனால் பெரும் சுகாதாரக்கேடு அப்பகுதி முழுவதும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண முயற்சி எடுப்பதாக பேரூராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் கடந்த இரு வருடங்களாகக் கூறி வருகிறது. ஆனால் பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எனவே இதற்கு தீர்க்கமான தீர்வு ஏற்படும் வகையில் திடக்கழிவு மேலாண்மைக்கான தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு தக்க இயந்திர வசதிகளும் செய்து கொடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இப்பிரச்சனை குறித்து துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.