சவுதி போல பாயப்போகும் ஊழல் வழக்குகள்... ஆட்சியை கலைக்க தேதி குறிப்பு?
சவுதி அரேபியா போல தமிழ்நாட்டிலும் சில அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பாயலாம் என்றும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பார்கள். ஆனால் அதிமுக ஆட்சிக்கு மணிக்கு மணி கண்டமாகவே இருக்கிறது.
இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரலாம் என்று அரசியல் பட்சிகள் கூவுகின்றன. எதிர்கட்சியினரும் இதையேத்தான் சொல்லி வருகிறார்கள்.
இது உண்மைதான் என்று உணர்த்தும் வகையில் ஆளுநரும் தனது ஆய்வை தொடங்கி விட்டார். ஆளுநருக்கு உதவி செய்ய இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி வரப்போவது உறுதி என்று வாட்ஸ் அப் தகவல்கள் உலா வருகின்றன.
பாயப்போகும் வழக்கு
அமைச்சரவையில் உள்ள பலரின் சொத்துகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆளுநர் வசம் உள்ளது. இவர்களில் சிலர் மீது ஊழல் வழக்கு பாயலாம் என்றும் பரபரப்பாக கூறப்படுகிறது.
ஆளுநருக்கு உதவியாக வரும் அதிகாரிகள்
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.வி. சோமநாதன் இல்லத் திருமணத்தில் மோடி பங்கேற்றார். அந்த சோமநாதன் ஐஏஎஸ்தான் ஆளுநரின் உதவியாளராகப் போவதாக கூறப்படுகிறது. அதேபோல், மத்திய அரசில் பணியாற்றிய ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டு பணிக்கு திரும்பியுள்ளார்.
மத்திய பணி டூ மாநில பணி
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ராஜகோபால் உள்துறை செயலாளராக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டார். இதனால் அவர் மத்திய அரசு பணிக்கு சென்று விட்டார்.
அவரது பணி காலம் முடிவதற்கு முன்னதாகவே தமிழகத்துக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்டார். அதோடு மோடிக்கு நெருக்கமான சோமநாதனும் தமிழக ஆளுநரின் செயலாளராக தமிழகம் வர உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணிக்கு திரும்பிய ராஜகோபால்
தமிழக ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவை மாற்றி விட்டு, புதிய செயலாளராக மத்திய அரசு பணியில் இருந்த ஓ.ராஜகோபாலை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது. இதனால் ராஜகோபால், தமிழக பணிக்கு திரும்பி விட்டார்.
ஆளுநரின் செயலாளர்கள்
பிரதமர் அலுவலக இணை செயலாளராக இருக்கும் சோமநாதன், மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். இவரும் தமிழக அரசு பணிக்கு திரும்புவார் என்றும் ஆளுநருக்கு உதவியாளராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
1976 திரும்புகிறதா?
1976ஆம் ஆண்டு எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்ததோடு அதைக் கண்டித்து கட்சியின் செயற்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக. தணிக்கையை கண்டிக்கும் விதமாக ஒருநாள் சலவைக்கு துணி போட்ட கணக்கு வழக்குகளை முரசொலியில் பிரசுரித்தது தி.மு.க தலைமை. இந்நிலையில் 1976ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி திமுக அரசு கலைக்கப்பட்டது.
திரும்பும் வரலாறு
திமுக ஆட்சியைக் கலைப்பதற்கு முன்பு தமிழகத்தில் ஆளுநரின் ஆலோசகராக நிர்வாகத்துறைக்கு ஆர்.வி சுப்ரமணியம், உள்துறைக்கு பி.கே தவே கவனிக்க நியமிக்கப்பட்டதை போல் தற்போது ஆளுநரின் ஆலோசகர்களாக இருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரும் வாரங்களில் தமிழக அரசியலில் பல பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.