ஆவடியில் கோழி வாங்குவதில் தகராறு: பாமக, திமுக பிரமுகருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு
ஆவடியில் கோழி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
சென்னை: ஆவடி மார்கெட்டில் கோழி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் தம்பி இருவருக்கும் ஓட ஓட அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், ரத்தம் சொட்ட சொட்ட இருவரும் நகராட்சி அலுவலகத்திற்குள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு மேலும் கூடியது.
ஆவடி அடுத்த அன்னனூர் பகுதியை சேர்ந்தவர் கவுரிவேல் 29. இவர் பாமகவில் ஆவடி வடக்கு பகுதி நகர செயலாளராக பதவி வகுத்து வருகிறார். இவரது தம்பி பிரபு வேல், இவர் ஆவடியில் 37 வது வட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளராக உள்ளார்.
இருவரும் இன்று அவர்களது நண்பர் இறங்கல் நிகழ்வு சென்றுள்ளனர். அங்கு இறுதி சடங்கிற்கு கருப்பு நிற கோழி தேவைப்பட்டதால் அதனை வாங்க ஆவடி மார்கெட் வந்துள்ளனர். அங்கு அப்சரா கறிக்கடை சென்ற கவுரிவேல் மற்றும் அவரது தம்பி பிரபுவேல் கோழியை வாங்க பேரம் பேசியுள்ளனர்.
இதில் கடை உரிமையாளர் ஜெயாலிணி என்பவருடன் அண்ணன்-தம்பிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் ஜெயாலிணி கறி வெட்டும் கத்தியில் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இதில் தலை,கை உள்ளிட்ட இடத்தில் பலத்த காயமடைந்தனர். துரத்தி, துரத்தி வெட்டியதில் உயிர் பயத்தில் கவுரிவேல் ரத்த வெள்ளத்தில் ஆவடி நகராட்சி அலுவலகத்திற்குள் தஞ்மடைந்தார்.
இதனால் ஆவடி பெரு நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல்துறையினர் இருவரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு இருவரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனிடையே ஜெயாலிணியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.