தினகரன் ஆதரவு எம் எல் ஏ ஏழுமலை மீது கொடூர தாக்குதல்.. வாய் கிழிந்தது!
டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஏழுமலை மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்: தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள பூந்தமல்லி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலையை அதிமுக தொண்டர் தாக்கியதில் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது.
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்துக்கு, துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஏழுமலை, சென்றுள்ளார்.
அங்கிருந்து நேற்றிரவு அவர் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது , அதே பகுதியைச் சேர்ந்த நைனா கண்ணு என்ற அ.தி.மு.க. தொண்டர், ஏழுமலையின் காரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் கண்ணாடி உடைந்து ஏழுமலையின் உதடுகள் கிழிந்து ரத்தம் வரத் தொடங்கியது
பலத்த காயமடைந்த ஏழுமலை திருவள்ளுவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஏழுமலையைத் தாக்கிய நைனா கண்ணு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது . போலீசார் அவரைத் தேடிவருகின்றனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவம் அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.