எங்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதா?... திவாகரன், ஜெயானந்த் மீது பாய்ந்த வெற்றிவேல்!
டிடிவி. தினகரன், திவாகரன் இடையேயான பனிப்போரானது முற்றிஇருப்பது டிடிவியின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் வெளி வந்துள்ளது.
Recommended Video
சென்னை : டிடிவி. தினகரனுக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் அவரது மகன் ஜெயானந்திற்கும் இடையே நடக்கும் பனிப்போர் முற்றி இருப்பது டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் வெளிவந்துள்ளது. சசிகலா, தினகரனுக்கு உறுதுணையாக நிற்கும் 21 எம்எல்ஏக்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் திவாகரன், ஜெயானந்த் செயல்படுவது வேதனையளிப்பதாக வெற்றிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மற்றும் திவாகரன், அவரது மகன் ஜெயானந்திடையே அண்மைக்காலமாக மோதல்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு ஏற்றாற் போல ஜெயானந்தின் பதிவுகளும் சூட்சமங்களாகவே இருந்தன.
ஜெயானந்தின் இன்றைய பதிவில் நான் அ.ம.மு.க என்று எங்கும் குறிப்பிடவில்லை... குறிப்பிடாமலே நான் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும் என ஏன் ஒரு சில நிர்வாகிகள் நினைக்கிறார்கள்??? என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜெயானந்திற்கும் திவாகரனுக்கும் பதிலடி தரும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் தகுதி நீக்கப்பட்டுள்ள வெற்றிவேல் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கழகத்தின் ஆணிவேராக சசிகலாவும், கழகத்தின் முகமாக துணைபொதுச்செயலாளர் டிடிவி. தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மன்னிக்க முடியாத துரோகத்தாலும், மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகள், அத்துமீறல்களுக்கும் மத்தியில் கழகத்தை வலிமையோடு, முன்னெடுக்கும் பணியில் துணைபொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செயலாற்றிவருகிறார்.
அவருக்கு பக்கதுணையாக, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, தியாகத்தாயின் பின்னால், நான் உட்பட 18 + 3 சட்டமன்ற உறுப்பினர்களும், எண்ணிலடங்கா கழக தொண்டர்களும் அணிவகுத்து நிற்கிறோம்.
ஆனால் எங்கள் தியாகத்தை கொச்சைபடுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சசிகலா குடும்பத்தை சார்ந்த திவாகரனும்,ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.
சசிகலா மீது சுமத்தப்பட்ட பொய்யான வீண்பழிகளையும், தங்கள் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பழி சொற்களையும் தினகரன் கழகத்தை தலைமையேற்று நடத்திய இந்த காலகட்டத்தில் தான் முறியடிக்க முடிந்தது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். கடந்த ஆண்டு மறைந்த மகாதேவனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்திரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்கு தெரியும்.
மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக்கூடாது என்கிற காரணத்தினால் தான், சசிகலா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்கு சென்றார். ஆனால் ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகி போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சசிகலாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது.
இதனை முதலில் சசிகலா ஏற்றுக்கொள்வாரா?. தங்களின் சுயலாபத்திற்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதிர்கள். நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள். எடப்பாடி அணி நிர்வாகியான சத்திரப்பட்டி சிவகிரி என்பவர், 18, சட்டமன்ற உறுப்பினர்களும் திவாகரன் பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை போன்ற ஒரு பொய் பரப்புரையை செய்கிறார்.
இவர் யார் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன், எங்கள் தலைமை சசிகலாவும், டிடிவி. தினகரனும் தான். இவர்கள் இருவரை தாண்டி, வேறு எவரின் கண்ணசைவுக்கும், குரலுக்கும் எங்கள் சிரம் அசையாது, எவருக்காகவும் எங்கள் தரம் மாறாது. எதுவரினும், எவர் எதிர்ப்பினும், எங்கள் பயணம் என்றும் சசிகலாவுடனும், டிடிவி. தினகரனுடனும் தான் என்பதில் மலையளவு உறுதியோடு இருக்கிறோம், காலத்துக்கும் இருப்போம் என்றும் வெற்றிவேல் குறிப்பிட்டுள்ளார்.