18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வரனும்... தியாகிகளாக நீங்க நிற்கனும்... தினகரன் வியூகத்தால் 'ஷாக்'
தினகரனின் திடீர் முடிவால் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: தகுதி நீக்க வழக்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என பேச்சு அடிபடுகிறது. ஆனால் தினகரனோ 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வரனும்.. தியாகிகளைப் போல நீங்க மீண்டும் போட்டியிடனும் என பேசி வருவது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சட்டசபைக்குள் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர முடியுமா என்ற கேள்வி தினகரனோடு சேர்த்து தி.மு.கவுக்கும் வந்துவிட்டது. காரணம், அ.தி.மு.க ஆதரவு மனநிலையில் இருக்கும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான். கூடவே, ' தி.மு.கவிலும் எடப்பாடிக்கு ஸ்லீப்பர் செல்கள் இருக்கலாம்' என்ற சந்தேகமும் ஸ்டாலினுக்கு இருக்கிறது.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் அமைச்சர்கள். ' அவர்களின் கோரிக்கையை எந்தவித தயக்கமும் இல்லாமல் செய்து கொடுங்கள்' என உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர். அதேபோல், சொந்தக்கட்சிக்காரர்களின் கோரிக்கைகளை அமைச்சர்கள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
அமைச்சர்களுக்கு ஓபிஎஸ் கண்டிப்பு
இதனைக் கண்டித்த ஓபிஎஸ், அமைச்சர்கள் பலரும் தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கே அனைத்தும் செய்தி கொடுப்பதாகத் தகவல் வருகிறது. இனி யாரும் அப்படி இருக்கக் கூடாது. கட்சிக்காரர்களுக்கு நாம் உதவி செய்தால்தான், அவர்கள் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள்' எனத் தலைமைக் கழகத்தில் வைத்தே பேசினார்.
தீர்ப்பு எதிராக வரனுமாம்
இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு தினகரனுக்கு ஆதரவாக வரலாம்' என்ற பேச்சால், மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் அவருடைய ஆதரவாளர்கள். " ஆனால், தினகரன் அதே மகிழ்ச்சியில் இருக்கிறாரா என்பது கேள்விக்குறி" எனப் பேசத் தொடங்கினார் அவருடைய ஆதரவாளர் ஒருவர்,
எடப்பாடியாரின் கருணை
அதாவது, சசிகலா தரப்பு எம்.எல்.ஏ என்ற பெயரில் தினகரன் மட்டும்தான் இருக்கிறார். 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு சாதகமாக வந்தாலும், 'ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா?' என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக எந்தவிதப் பணப் போக்குவரத்தும் இல்லாமல் தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் வாடி வதங்கியுள்ளனர். மீண்டும் சட்டசபைக்குள் சென்றாலும், எடப்பாடியின் கருணை இருந்தால்தான் அவர்களுக்கு அனைத்தும் வந்து சேரும்.
தேர்தலில் நிற்போமே
இதனால், இவர்களில் பலர் மனம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, 'தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு எதிராக வந்தால் மகிழ்ச்சி' என்ற மனநிலையில் தினகரன் இருக்கிறாராம். இதைப் பற்றி தனது ஆதரவாளர்களிடம் விரிவாகப் பேசியிருக்கிறார் தினகரன். 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால், மக்கள் மனதில் அனுதாபம் தேட முடியும். தியாகிகளை முன்னிறுத்தும்போது தனக்கான செல்வாக்கு இன்னும் அதிகரிக்கும். தீர்ப்பின் அடிப்படையில் சட்டசபைக்குள் செல்வதால் என்ன பலன் இருக்கப் போகிறது? ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு தி.மு.க சம்மதிக்குமா?' என்றெல்லாம் விவாதித்து வருகிறார்.
ஒருவர்தான் தினகரன் ஆதரவு
இதனால் மிகுந்த அதிருப்தியில் இருக்கும் தினகரன் ஆதரவு தகுதிநீக்க எம்.எல்.ஏ ஒருவர், ' இவரை நம்பித்தான் ஆளுநரிடம் மனு கொடுத்தோம். எங்களுக்கு எதையும் செய்யவில்லை. தேர்தலில் நிற்க சின்னம்மாதான் சீட் கொடுத்தார். ' அம்மாவுக்குப் பிறகு உங்களைத்தான் ஆதரிப்போம்' என அவரிடம் சத்தியம் செய்து கொடுத்தோம். சத்தியத்தை மீறியவர்கள் எல்லாம் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் செலவு செய்த பணத்தைக்கூட இன்னமும் எடுக்கவில்லை. தினகரனுக்கு ஆதரவாக தங்க.தமிழ்ச்செல்வன் மட்டும்தான் இருக்கிறார். அம்மா உருவாக்கிய கட்சி கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறார்கள். நாங்கள் தியாகிகளாகவே இருக்க விரும்பவில்லை' எனப் பேசியிருக்கிறார். இது அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த பலன்' என்கிறார்கள் ஆளும்கட்சி தரப்பில். தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன எதிர்க்கட்சிகள்.