சர்ச்சைகளுக்கு மத்தியில் மே 1-ல் சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம்!!
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து தீட்சிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் மே 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாக பொது தீட்சிதர்கள் செயலர் பாஸ்கர தீட்சிதரிடம் கடந்த 12-ந் தேதி சிதம்பரத்தைச் சேர்ந்த கனகசபேச தீட்சிதர் என்பவர் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து 'நடராஜர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு திருப்பணி கமிட்டி அமைக்கவில்லை' என்று சிதம்பரம் துணை ஆட்சியர் அரவிந்த்திடம் கனகசபேச தீட்சிதர் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் பொது தீட்சிதர் பாஸ்கர தீட்சிதருக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பாஸ்கர தீட்சிதர் பதிலும் அளித்திருந்தார்.
இந்நிலையில் சிதம்பரத்தில் நேற்று பொது தீட்சிதர்களின் செயலர் பாஸ்கர தீட்சிதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி 12 கால யாக பூஜைகள் நடத்தப்படுகிறது. யாகசாலை பூஜைகள் 23-ந் தேதி துவங்கி 30-ந் தேதி முடிவடைகிறது.
கும்பாபிஷேக நாளான மே 1-ந் தேதி, காலை 7:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள், சித்சபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா கும்பாபிஷேகமும், நான்கு ராஜகோபுரம், ராஜ சபை என்கிற ஆயிரம் கால் மண்டபம் உள்ளிட்ட சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி, 2-ந் தேதி தேர் உற்சவமும், 3-ந் தேதி ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், மதியம் 2:30 மணிக்கு தரிசன காட்சியும் நடக்கிறது. கும்பாபிஷேகம் முழுமையான மத ரீதியான சடங்குகளுடன் நடைபெறும் வைபவமாகும்.
தற்போது நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்திற்காக திருக்கோவில் எவ்வித திருப்பணியோ, கட்டடம் செப்பனிடும் பணியோ நடைபெறவில்லை. பொது தீட்சிதர்களின் தீர்மானம் அடிப்படையில் திருவுளச்சீட்டு எடுத்து கும்பாபிஷேக ஆச்சாரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆன்மீக மெய்யன்பர்கள், கட்டளைதாரர்கள் உபயத்துடன் நடைபெற உள்ளது.
கோவில் சட்டம் அனைத்து வகையிலும் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பணி கமிட்டி என்பது கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன் திருப்பணி நடைபெற்றால் தான் தேவைப்படும். தற்போது கும்பாபிஷேகத்திற்காக புதுப்பிக்கும் பணி மட்டுமே நடக்கிறது.
யாரிடமும் பணம் வசூல் செய்யப்படவில்லை. இதற்கு கமிட்டி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு பாஸ்கர தீட்சிதர் கூறினார்.