முதல்வராகக் கூடாது சசிகலா... ஆன்லைன் பெட்டிஷனுக்கு மக்களிடையே அமோக ஆதரவு!
அதிமுக பொதுச்செயலாலளர் சசிகலா முதல்வராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்டுள்ள ஆன்லைனின் பெட்டிசனுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதுவரை ஒருலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்டவர
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழக முதல்வராக பதவியேற்றார் ஒ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளரானார் சசிகலா. இப்போது ஞாயிறன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டசபைக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சசிகலா முதல்வராக வேண்டும் என தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக்கொண்டார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
சசிகலா முதல்வராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் சசிகலாவிற்கு எதிரான அலையே வீசுகிறது. இந்நிலையில், சசிகலா முதல்வராவதை தடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசன் என்பவர் சேஞ்ச் டாட் ஓஆர்ஜி (change. org) என்ற பிரபல கையெழுத்து இயக்க வெப்சைட் மூலம் அவர் இந்த கோரிக்கையை வைத்துள்ளார். ஏராளமான வழக்குகளில் சிக்கியுள்ள சசிகலா, மாநிலத்தின் முதல்வராகக் கூடாது என்பதே அவரின் கோரிக்கையாகும்.
இந்த கையெழுத்து தளம் துவங்கப்பட்ட பிப்ரவரி 5ஆம் தேதியன்று 15 நிமிடத்திற்குள் 10,000 பேர் தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்தனர். இந்த இணையதளத்தில் 48 மணிநேரத்திற்குள் 1 லட்சத்து55ஆயிரம் பேர் சசிகலாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.