மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க பள்ளிகளில் காய்கறி தோட்டம்.. புதுக்கோட்டையில் புது முயற்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான காய்கறிகளின் மூலம் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக, ஆரம்பக்கட்டமாக 5 அரசுப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை போக்கவும் அரசுப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தில் புதுக்கோட்டை ஸ்ரீபிரகதம்பாள், ஆலங்குடி, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், கொத்தமங்கலம் மற்றும் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதில், முதல்கட்டமாக ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்ட தோட்டத்தில் விதைகள் நடப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சூசை தலைமையில் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதில், கத்தரி, வெண்டை, மிளகாய், கீரை, பரங்கி, பீர்க்கங்காய், சுரைக்காய், அவரை, பாகற்காய் விதைகள் விதைக்கப்பட்டன. மேலும், மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, முருங்கை கன்றுகளும் நடப்பட்டன. இவற்றின் விளைபொருட்கள் மாணவர்களின் மதிய உணவுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.