நிறுத்தனும்.., திவாகரனும், கிருஷ்ணப்பிரியாவும் நிறுத்தனும்: கொந்தளிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்
தவறான தகவல்கள் சொல்வதை திவாகரனும், கிருஷ்ணப்பிரியாவும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் கேட்டுக்கொண்டு உள்ளார்.
சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல்களை சொல்லி திவாகரனும், கிருஷ்ணப்பிரியாவும் மக்களை குழப்புவதாக டி.டி.வி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டு உள்ளார்.
ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாலையே இறந்துவிட்டதாக, சசிகலாவின் சகோதரர் திவாகரன் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்து இருந்தார். இது தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில், தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக திவாகரன் மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து டி.டி.வி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில், ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் முன்னுக்கு பின் முரணாக பேசி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார். டிசம்பர் 5ம் தேதி இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ள நிலையில் எதற்காக தவறான தகவல்களை அவர் தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், சசிகலா சிறையில் உள்ள நிலையில் துணைப்பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் எங்களை வழிநடத்தி வருகிறார். மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடி, இடைத்தேர்தலில் வெற்றியும் பெற்று இருக்கிறார். அவரை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், தேவை இல்லாமல் திவாகரனோ, கிருஷ்ணப்பிரியாவோ தவறான தகவல்கள் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அதில் இருந்து பின் வாங்க மாட்டோம். தனிக்கட்சி தொடங்குவதாக இருந்தால் அவருக்கு ஆதரவாக இருக்கும் 18 எம்.எல்.ஏ.,க்களும் அவர் பின்னால் செல்லமாட்டோம்.