எடப்பாடியார் அரசில் சத்துணவு ஆயா வேலைக்கு கூட ரூ.3 லட்சம் லஞ்சம்.. திவாகரன் அட்டாக்
தமிழகத்தில் தற்போது நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சத்துணவு ஆயா வேலைக்குக் கூட ரூ. 3 லட்சம் லஞ்சமாகப் பெறப்படுகிறது என்று சசிகலா சகோதரர் திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை: எடப்பாடியார் ஆட்சியில் சத்துணவு ஆயா வேலைக்குக் கூட 3 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெறப்படுகிறது என்று திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என அணிகள் பிரிந்து இருக்கும் நிலையில் டிடிவி தினகரன் தனது பலத்தை நிரூபிக்க நாளை மதுரை மேலூரில் பொதுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
பொதுக் கூட்டம் நடைபெற உள்ள இடத்தைத் திவாகரன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முனுசாமி பேச்சைக் கேட்டு எதிர்ப்பு
முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் பேச்சைக் கேட்டு ஓபிஎஸ் எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். நாங்கள் யாரும் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
ஓபிஎஸ்ஸுடன் தொடர்பில் இருக்கிறேன்
நான் இன்னும் ஓபிஎஸ்ஸுடன் தொடர்பில் இருக்கிறேன். நான் அடிக்கடி அவரை தொலைப்பேசியில் அழைத்து கட்சி ஒன்றாக வேண்டும் என்பது குறித்து பேசி வருகிறேன். அவர் என்னிடம் பேசும் போது நல்லவிதமாகவே பேசுகிறார். ஆனால், அவர் என்ன முடிவெடுக்க உள்ளார் என்பது எதிர்காலத்தில்தான் தெரிய வரும்.
சிறைக்குச் சென்ற சசிகலா குடும்பம்
சசிகலா குடும்பம் யாருக்கும் காவடி எடுக்கவில்லை. தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு அரசியல் மாற்றத்தின் போதும் சசிகலா குடும்பம் சிறைக்குத்தான் சென்றுள்ளது. இந்தக் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் மீதும் வழக்குகள் தொடரப்பட்டு சிறைக்குச் சென்றிருக்கிறோம்.
ஆயா வேலைக்கு லஞ்சம்
தமிழகத்தில் இன்று சத்துணவு ஆயா வேலைக்குப் போகிறவரிடம் கூட 3 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுகிறது. இதெல்லாம் காதில் வாங்கும் போது எங்களுக்கு வேதனையாக உள்ளது என்று திவாகரன் தெரிவித்தார்.