அன்புமணி பிரசாரம்: 'காதல் திருமண சர்ச்சை'யில் சிக்கிய திவ்யாவின் தாய் ஆரத்தி!
தர்மபுரி மாவட்டம் செல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா. அதேபகுதியில் நத்தம் காலனி நாயக்கன்கொட்டாயை சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து கலப்புத் திருமணம் செய்தார். இந்த விவகாரத்தில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
இருவரும் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கலவரம் ஏற்பட்டது. மூன்று கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடிசைகள் கொளுத்தப்பட்டன. ஆண்கள் பலரும் ஊரை விட்டே விரட்டப்பட்டனர். போலீசாரின் வழக்கிற்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்தனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் திவ்யாவும் பிரிந்தார். கடந்த ஜூலை 4ம் தேதி, இளவரசனும் தற்கொலை செய்து கொண்டார்.திவ்யாவின் குடும்பத்திற்கு ஆதரவாக பாமக தீவிரமாக செயல்பட்டது.
அன்புமணி பிரசாரம்
தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி நேற்று செல்லன்கொட்டாய், குண்டல்பட்டி, நாயக்கன்கொட்டாய், சவுக்கு தோப்பு, செம்மாண்டகுப்பம் ஆகிய பகுதிகளில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஆரத்தி எடுத்து வரவேற்பு
இதில் செல்லன்கொட்டாயில், திவ்யாவின் தாயார் தேன்மொழி தலைமையில் ஏராளமான பெண்கள், அன்புமணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது அவரிடம் அன்புமணி நலம் விசாரித்தார்.
போலீஸ் பாதுகாப்பு
அன்புமணியின் பிரசாரத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நத்தம் காலணிக்கு போகாத அன்புமணி
அதேசமயம் இளவரசனின் பெற்றோர் வசிக்கும் நத்தம் காலனி குடியிருப்பு பகுதிக்கு அன்புமணி பிராசாரத்திற்குப் போகவில்லை. அந்த இடம் தவிர மற்ற இடங்களில் பாமகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.