அரசியல் ஆதாயத்துக்காக டெல்லி போகும் ஓபிஎஸ்... ஜெயக்குமார்தான் எட்டப்பர்.. திவாகரன் மகன் ஜெயானந்த்
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார்தான் எட்டப்பர் போல் நடந்து கொள்கிறார் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் அரசுக்கு எதிராகச் சதி, துரோகம் செய்பவர்கள் எட்டப்பர்கள். ஜெயலலிதாவின் கனவை சிதைப்பவர்கள் எட்டப்பர்கள். கட்சிக்குள் பிரச்சனை என்பது அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கிறது என்றார்.
இந்நிலையில் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு ஜெயானந்த் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில், ஜெயலலிதா அரசுக்கு எதிராக நடந்து கொள்ளும் அமைச்சர் ஜெயக்குமார்தான் எட்டப்பர். ஆட்சியை கவிழ்க்க நாங்கள் ஒருபோதும் திட்டமிட்டதில்லை.
தினகரனை சந்திக்க கூடாது என எனது தந்தை திவாகரன் ஒருபோதும் கூறியதில்லை. மேலூர் பொதுக் கூட்டத்தில் முதல் வரிசையில் அமரவைக்கப்பட்டது குறித்து குடும்ப அரசியல் என்று குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தவறான கருத்து. அரசியல் ஆதாயத்துக்காகவே ஓபிஎஸ் அவ்வப்போது டெல்லி செல்கிறார். ஓபிஎஸ் அணியினர் கோரும்படி ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடந்தால் அதற்கு ஓபிஎஸ்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார் அவர்.