வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல், மயூரநாதர் கோயிலில் பூஜை செய்த திவாகரன்!
வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல் திவாகரன் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார்.
திருச்சி: வருமான வரித்துறை அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகவில்லை. மாறாக மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் அவர் சிறப்பு பூஜை செய்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர். இந்த சோதனை 5 நாட்கள் நீடித்தது.
1800 அதிகாரிகள் களம் இறங்கி இந்த மெகா சோதனையை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கணக்கில் வராத நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
வருமான வரித்துறை ரெய்டு
சென்னை, மன்னார்குடி, திருச்சி, பெங்களூரு என 190 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. திவாகரனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரித்துறை நோட்டிஸ்
இதில் பல முக்கிய சொத்து ஆவணங்களும் பல லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணமும் சிக்கியதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகுமாறு திவாகரனுக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியது.
திவாகரன் ஆஜராகவில்லை
இதைத்தொடர்ந்து அவர் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் திவாகரன் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை.
மயூரநாதர் கோவிலில் பூஜை
அவர் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது. பூஜையை முடித்த கையோடு விசாரணைக்கு செல்வது உகந்ததல்ல என கூறப்பட்டதால் அவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
தொடர் சறுக்கல்களால் பூஜை
வருமான வரரித்துறை ரெய்டு மற்றும் கட்சி, ஆட்சி, சின்னம் தொடர்பாக அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் சறுக்கல்களை தொடர்ந்து திவாகரன் மயூராநாதர் கோவிலில் பூஜை செய்ததாக தெரிகிறது. வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அடுத்த வாரத்தில் திவாகரன் ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.