'திராவிடம்' பெயருடன் திவாகரனின் புதிய கட்சி! - நாஞ்சில் சம்பத்துக்கு 'திடீர்' அழைப்பு
திராவிடம் பெயரில் திவாகரன் புதிய கட்சியை தொடங்கவுள்ளார். அதில் சேர நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை: மன்னார்குடியில் புதிய கட்சியின் பெயரை அறிவிக்க இருக்கிறார் திவாகரன். ' கட்சியின் பெயரில் திராவிடம் இருக்கும். புதிய சின்னத்தையும் அறிமுகப்படுத்த இருக்கிறோம். தினகரனுக்கு எதிராக வலுவான கட்சியாக இது அமையும்' என்கின்றனர் அம்மா அணி நிர்வாகிகள்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உயிரோடு இருந்தவரையில், திவாகரனோடு மறைமுக பனிப்போரில் ஈடுபட்டு வந்தார் தினகரன். ' இருவரும் இணைந்து செயல்பட வேண்டும்' எனத் தொடர்ந்து பேசி வந்தார் சசிகலா. இதன் விளைவாக, அனுராதாவின் அம்மா சந்தானலட்சுமியின் மரணத்தின்போது இருவரும் இணைந்து பேட்டி கொடுத்தனர்.
வீதிக்கு வந்த சண்டை
இந்த இணைப்பு சில நாட்கள்கூட நீடிக்கவில்லை. நடராஜன் மரணத்துக்குப் பிறகு இந்த சண்டை வீதிக்கு வந்துவிட்டது. ஒருகட்டத்தில், சசிகலா அனுமதியுடன் திவாகரனுக்கு எதிராக அறிக்கை வெளியிடவும் வைத்தார்.
ஊடகங்களில் பேச...
திவாகரனும், ' இனிமேல் சசிகலா என்னுடைய முன்னாள் சகோதரி' என உறுதியாகக் கூறிவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு மன்னார்குடியில் 'அம்மா அணி' என்ற பெயரில் கட்சி அலுவலகம் திறந்தார் திவாகரன். அவருடைய கட்சியின் சார்பில் ஊடகங்களில் பேசும் நிர்வாகிகளின் பட்டியலையும் வெளியிட்டார்.
மன்னார்குடி
அதேநேரம், தினகரன் அணியில் இருந்து எந்த நிர்வாகிகளும் திவாகரன் பக்கம் செல்லவில்லை. இதனை எதிர்பார்த்த திவாகரனும், ' இன்னும் சில நாட்களில் அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்த இருக்கிறேன்' என உறுதியாகக் கூறி வந்த நிலையில், வரும் 10-ம் தேதி மன்னார்குடியில் புதிய கட்சியின் அலுவலகத்தைத் திறக்க இருக்கிறார்.
புதிய கட்சி தீர்மானம்
இதுகுறித்து நம்மிடம் பேசிய அம்மா அணி நிர்வாகி ஒருவர், " அம்மா அணி என்ற பெயரில் செயல்பட்டாலும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு திவாகரன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காரணம், கட்சியின் பெயரில் சில மாற்றங்களைச் செய்ய விரும்பியதுதான். அதற்கேற்ப, புதிய கட்சிக்கான பெயரைத் தீர்மானித்துவிட்டார்.
திராவிடம் பெயர் கட்டாயம்
இதில் திராவிடம் என்ற பெயர் கட்டாயம் இருக்கும். சின்னமும் அ.தி.மு.கவை நினைவுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றி திவாகரன் தரப்பிடம் பேசிய நிர்வாகி ஒருவர், ' கட்சியில் திராவிடம் இருப்பதால், நாஞ்சில் சம்பத்தை நமது அணிக்கு அழைக்கலாமே? நம்முடைய கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கும் உதவியாக இருப்பார்' எனக் கூற, ' அவரிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். வந்தால் பார்த்துக் கொள்வோம்' எனக் கூறியிருக்கிறார்.
செயல்பாடுகள்
புதிய கட்சியை வடிவமைக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் திவாகரன். இந்த அமைப்பின் செயல்பாடுகளில் மறைமுகமாகச் செயல்பட இருக்கிறார் ஜெயானந்த்" என்றார் விரிவாக.