திவாகரனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. தினகரன் தடாலடி
தினகரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் தினகரன் தெரிவித்தார்.
சென்னை: திவாகரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் கோவில் விழாவுக்கு சென்ற டி.டி.வி தினகரனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரூ.20 நோட்டை கையில் வைத்துக்கொண்டு டி.டி.வி தினகரனுக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது ஓட்டுக்கு ரூ.10000 தருவதாக டி.டி.வி உறுதியளித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து டி.டி.வி வாக்குக் கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரூ.20 டோக்கன்
ரூ.20 நோட்டு இங்கே, ரூ.10000 எங்கே ? என்று பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து காவல் துறையினர் தலையிட்டு டி.டி.வி தினகரனை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
மதுசூதனன் தரப்பு செட் அப்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஆர்கே நகரில் 20 ரூபாய் நோட்டுக்கு பணம் தருவோம் என நாங்கள் யாரும் கூறவில்லை என்றார். மதுசூதனன் தரப்பினர் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை செட் அப் செய்து இதுபோன்று செய்வதாகவும் அவர் கூறினார்.
நேரத்தை வீணாக்க விரும்பவில்லை
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து திவாகரன் தனிக்கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், திவாகரனுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றார். திவாகரன் கூறுவதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என்றும் தினகரன் கூறினார்.
மனநலம் பாதிப்பு
மேலும் திவாகரனுக்கு 2002ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றும், தற்போது அவருக்கு மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் தினகரன் கூறினார். திவாகரன் கோபத்தில் விரக்தியில் பேசுகிறார், அவருக்கெல்லாம் பதில் சொல்லிவ நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் தினகரன் கூறினார்.
மோதல் தீவிரம்
யாருடைய தூண்டுதலில் திவாகரன் செயல்படுகிறார் என்பது மக்களுக்கு விரைவில் தெரியும் என்றும் தினகரன் கூறினார். ஏற்கனவே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் திவாகரன் குறித்து தினகரன் இவ்வாறு பேசியிருப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.