கொலை மிரட்டல், ஆள் கடத்தல் வழக்கு... சிறைவாசத்திலிருந்து தப்பினார் சசி தம்பி திவாகரன்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 40. இவர், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக நாகை கிளையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் தங்கை மகள் யாழினி. 22 வயதான இவர் மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியில் படித்து வந்தார்.
அப்போது, ஒருவரை காதலித்து யாழினி திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக, சரவணனை கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, திவாகரனின் ஆட்கள் கடத்திச் சென்று மிரட்டியும், கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாகக் கூறியும், 1 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக எடையூர் போலீசில் சரவணன் புகார் செய்தார்.
இதையடுத்து திவாகரன் மீது கொலை மிரட்டல் விடுத்தது, கடத்தியது உள்ளிட்ட புகார்களைப் போலீஸார் பதிவு செய்து வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் திவாகரன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கு மன்னார்குடி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களான திவாகரன், ரகுநாதன், பன்னீர்செல்வம், ஸ்டாலின், யுவராஜ், வினோத், கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். மாலை 5.45 மணிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி, திவாகரன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மன்னார்குடியைச் சேர்ந்த திவாகரன், சசிகலாவின் தம்பி ஆவார். ஏற்கனவே சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.